பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் மீது துப்பாக்கிச்சூடு முயற்சி.. சிதம்பரம் அருகே ஷாக்!
கடலூர்: சிதம்பரம் அருகே பாஜக சிறுபான்மையினர் பிரிவு தலைவர் மீது துப்பாக்கிச்சூடு முயற்சி நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்திருக்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர், துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர்.

கடலூர் மாவட்டத்தின் பாஜக சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட தலைவராக அஸ்கர் அலிகான் இருந்து வருகிறார். இவர் சிதம்பரம் அடுத்துள்ள பு-முட்லூர் பகுதியில் வசித்து வருகிறார். இன்று இரவு இவரது வீட்டிற்கு வெளியே இருந்த பைக்கை எடுக்க முயன்றிருக்கிறார். அப்போது மர்ம நபர்கள் இவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டிருக்கின்றனர். சுமார் 8 மணியளவில் இந்த சம்வம் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் நல்வாய்ப்பாக இதிலிருந்து அவர் தப்பித்திருக்கிறார்.
சம்பவம் அறிந்து வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இதில் பயன்படுத்தப்பட்டது ஒரிஜினல் துப்பாக்கியா? அல்லது ஏர்கன் போன்ற துப்பாக்கியா? என்று விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர். அதேபோல, அலிகானின் மொபைலில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததாக சொல்லப்படுகிறது. அந்த மொபைலை பறிமுதல் செய்து ஆய்வுக்கு போலீசார் அனுப்பியுள்ளனர்.
பொது வெளியில் தேசிய கட்சியின் மாவட்ட தலைவரை குறிவைத்து துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்திருப்பது கடலூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications