சிதம்பரம் பேருந்து நிறுத்தத்தை மணமேடையாக்கிய விவகாரம்.. பாலிடெக்னிக் மாணவன் கைதாகிறாரா?
சிதம்பரம்: சிதம்பரம் பேருந்து நிலையத்தில் பிளஸ் 2 மாணவிக்கு தாலி கட்டிய விவகாரத்தில் பாலிடெக்னிக் மாணவனை கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிச் சீருடை அணிந்து கொண்டு மது குடிப்பது, ஒரு பையனுக்காக நிறைய மாணவிகள் அடித்துக் கொள்வது, பள்ளிக்கூட வாசல்களில் குடுமிப்பிடி சண்டைகளில் ஈடுபடுவது என்பதை பார்க்கும் போது பெற்றோர் மனம் பதைபதைக்கிறது.
தன்னந்தனியே மாணவர்களும் மாணவிகளும் காட்டு பகுதி, ஆள் அரவமற்ற பகுதிகளுக்கு சென்று மது குடிக்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. இதை காட்டிலும் மிகவும் மோசமான சம்பவங்களும் நடக்கின்றன.

காதல்
காதல் என்ற பெயரில் பள்ளிச் சீருடையில் கோயிலில் தாலி கட்டிக் கொள்வது உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதையெல்லாம் டிவிகளிலும் சமூக வலைதளங்களிலும் பார்க்கும் பெற்றோர் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். பள்ளி வகுப்புகளை கூட மாணவிகள் கட் அடித்துவிட்டு சினிமா தியேட்டர்களுக்குச் செல்வதும் தொடர்கதையாகி வருகிறது.

சிதம்பரத்தில் பேருந்து நிலையம்
இந்த நிலையில் சிதம்பரத்தில் ஒரு பேருந்து நிலையத்தில் பிளஸ் 2 மாணவிக்கு மாணவன் தாலி கட்டும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவியது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பேருந்து நிலையத்தின் அருகே சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கு செல்லும் மினி பேருந்துகளுக்கான பேருந்து நிறுத்தம் உள்ளது.

பள்ளி சீருடை
அங்கு பள்ளி சீருடையில் இருக்கும் மாணவிக்கு பாலிடெக்னிக் கல்லூரி படிக்கும் சீருடை அணிந்த மாணவன் தாலி கட்டும் நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலானது. இதையடுத்து மாணவ, மாணவியை அழைத்து போலீஸார் விசாரணை நடத்தினர். குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரம்யா மாணவர், மாணவியிடமும் உடன் இருந்தவர்களிடமும் விசாரணை நடத்தினார். இந்த நிலையில் மாணவனை கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமூகவலைதளங்கள்
இதையடுத்து இந்த வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிட்ட கோவிலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த பாலாஜி கணேஷை கிள்ளை போலீஸார் கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 3 நாட்கள் கவுன்சலிங் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் பொது இடங்களில் நடக்கும் போது அதை பார்த்துக் கொண்டு வீடியோ எடுக்காமல் சமூக பொறுப்புணர்வை உணர்ந்து கொண்டு அந்த சம்பவங்களை தடுக்க வேண்டும். குறைந்தபட்சம் அருகில் உள்ள காவல் நிலையத்திலாவது புகார் கூறவேண்டும். முக்கியமாக 18 வயதுக்கு கீழ் உள்ள மாணவ, மாணவி என்பதால் இந்த வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிடாமலாவது இருந்திருக்கலாம் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.












Click it and Unblock the Notifications