"எழுத்து பிழை".. சிதம்பரம் தவெக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு.. மாற்று வேட்பாளராகும் தந்தை
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டசபை தொகுதியில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளராக களமிறங்கிய பாரியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவரது தந்தை நெடுஞ்செழியனின் மனு ஏற்கப்பட்டுள்ளது. இதனால் தவெகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக பாரியின் தந்தை நெடுஞ்செழியன் களமிறங்குகிறார்.

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடுகிறது. 234 சட்டசபை தொகுதிகளுக்கும் விஜய் தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை அறிவித்தார். வேட்பாளர்களும் அனைவரும் அந்தந்த தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் நேற்று முடிவடைந்த நிலையில் இன்று மனுக்கள் மீதான பரிசீலனை நடந்து வருகிறது.
அந்த வகையில் விஜய் இந்த தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர், திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதிகளில் விஜய் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த 2 மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர் 2 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
தவெக வேட்பாளரின் மனு நிராகரிப்பு
இதற்கிடையே தான் தவெகவிற்கு அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டசபை தொகுதியில் தவெக வேட்பாளரின் வேட்பு மனு இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் சட்டசபை தொகுதியில் தவெக சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக பாரி என்பவரை விஜய் அறிவித்தார்.
பாரி சார்பில் வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இன்று அவரது மனு மீது பரிசீலனை நடந்தது. அப்போது வேட்புமனுவில் எழுத்து பிழைகள் இருந்ததாகவும், முறையாக பூர்த்தி செய்யவில்லை என்றும் புகார் எழுந்தது. இதையடுத்து தவெக வேட்பாளர் பாரியின் வேட்புமனு அதிரடியாக நிராகரிக்கப்பட்டது.
மகனுக்கு பதில் தந்தை போட்டி
இதனால் தவெகவின் சிதம்பரம் தொகுதியின் தவெக வேட்பாளர் பாரி தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவாகி உள்ளது. அதேவேளையில் முன்னெச்சரிக்கையாக பாரி சார்பில் அவரது தந்தை நெடுஞ்செழியன் மாற்று வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அவரது வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. இதனால் பாரிக்கு பதில் அவரது தந்தை நெடுஞ்செழியன் சட்டசபை தேர்தலில் தவெக சார்பில் வேட்பாளராக களமிறங்க வாய்ப்புள்ளது.
தவாகவின் வேட்பு மனுக்களும் நிராகரிப்பு
மேலும் சிதம்பரம் தொகுதியில் தவெக மட்டுமின்றி வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேட்பாளர்களின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டு இருந்தது. தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணியில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் இருந்தது. இந்த முறை திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது. பல்வேறு அமைப்புகள், சிறிய கட்சிகள் சார்பில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைமையிலான கூட்டணி அமைத்து சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது.
தவாக போட்டியிட முடியாது
சிதம்பரம் தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேட்பாளராக சுரேந்தர் வேட்புமனுத்தாக்கல் செய்தார். அதேபோல் மாற்று வேட்பாளராக சுதா என்பவரும் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இந்நிலையில் தான், இவர்கள் 2 பேரின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சிதம்பரம் தொகுதியில் வேட்பாளர் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications