பண்ருட்டி அருகே கண்டெடுக்கப்பட்ட சோழர் கால பெருமாள் சிலை..கோவில் கட்டி கும்பிடப்போகும் மக்கள்!
கடலூர்: பண்ருட்டி அருகே உள்ள திருத்துறையூர் கிராமத்தில் விஏஓ அலுவலக கட்டுமான பணிக்காக குழி தோண்டியபோது சோழர்காலத்தை சேர்ந்த பெருமாள் சிற்பம் கிடைத்துள்ளது.
சமீபத்தில் பல ஊர்களில் பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் சிலைகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டும் போது சமீபத்தில் சில சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. அதே போல பண்ருட்டி அருகே உள்ள திருத்துறையூர் கிராமத்தில் விஏஓ அலுவலக கட்டுமான பணிக்காக குழி தோண்டியபோது சோழர்காலத்தை சேர்ந்த பெருமாள் சிலை கண்டு எடுக்கப்பட்டுள்ளது.

அந்த பெருமாளின் சிற்பம் அற்புத தோற்றத்தை கொண்டுள்ளது. நிலையில் சுமார் ஐந்தரை அடி உயரத்தில் பெருமாள் இருக்கிறார். தலையில் கிரிடமாக மணிமுடியும், இரு காதுகளிலும் காதணியாக மகர குண்டலமும், கழுத்தில் வனமாலையும், வைஜெயந்தி என்ற இரு மாலையும் அணிந்துள்ளார்.
இடது புரத்தில் உள்ள இரண்டு கைகளில் மேல் கையில் சங்கும், கீழ்புற கை இடுப்பின் மேல் வைத்து கடியஸ்த நிலையில் இருக்கிறார்.மேலும் வலது மேல் கையில் சக்கரமும், கீழ்புற கையில் அபயமுத்திரையும் காட்டப்பட்டுள்ளது. மார்பு பகுதியில் பூணுல் அணிந்துள்ளார்.
இடுப்பின் மேல் உதரபந்தம் என்ற அலங்கார அணிகலனும், இடுப்பின் முன்புறத்தில் சிம்மம் காட்டப்பட்டுள்ளது, இடுப்பின் ஆடையாக கீழ்பட்டாடை என்ற உடை அணிந்து நின்ற நிலையில் உள்ளார்.
இதனை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றுள்ளனர். மேலும் பூ மாலைகள் அணிவித்து சூடம் ஏற்றி பூஜை செய்து வழிபாடு செய்து வருகின்றனர்.
தகவல் அறிந்து வந்த பண்ருட்டி வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் சிலையினை எடுத்துக்கொண்டு அலுவலகம் செல்ல முயற்சி செய்தனர். ஆனால் அப்பகுதி சார்ந்த பொதுமக்கள் சிலையினை தாங்களே வைத்துக் கொண்டு கோவில் கட்டி சாமி தரிசனம் செய்யப் போவதாகவும் அதற்காக சிலையினை ஊர் மக்களிடமே ஒப்படைக்குமாறு கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று சிலையை ஊர் மக்களிடம் ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications