'ஏய் கோவிந்தசாமி கதவை திற'.. கடலூர் அருகே நள்ளிரவில் வீடு தேடி வந்த விஐபி.. மிரண்ட மக்கள்
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் ஒரு பக்கம் வல்லாறும், மறுபக்கம் கொள்ளிடம் ஆறும் இருக்கிறது. இதுதவிர சிதம்பரத்தை ஒட்டித்தான் புகழ் பெற்ற பிச்சாரவரம் முகத்துவாரம் இருக்கிறது. முற்றிலும் நீர்நிலைகள் அதிகம் உள்ள பகுதியாக சிதம்பரத்தை ஒட்டியுள்ள கடல் பகுதிகள் உள்ளன. இந்நிலையில் சிதம்பரம் அருகே உள்ள தெற்கு சாலியன் தோப்பு பகுதியில் முதலை ஒன்று வீடு தேடி வந்துள்ளது. கதவை தட்டிய சத்தம் கேட்டு திறந்து பார்த்து வீட்டில் உள்ளவர்கள் மிரண்டு போனார்கள்.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்துக்கு அருகே வங்கக் கடலை ஒட்டியுள்ள பகுதியான பிச்சாவரம் அலையாத்திக் காடுகள் (சதுப்புநிலக்காடுகள், மாங்குரோவ் காடுகள்) மிகுந்துள்ளன. இங்குள்ள அலையாத்திக் காடே உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடு என்று சொல்கிறார்கள்.

பிச்சாவரம் காட்டுப்பகுதியின் பரப்பளவு மொத்தம் 2800 ஏக்கர்கள் ஆகும். இப்பகுதி சிறுசிறு தீவுகள் நிறைந்து காணப்படுகிறது. இக்காடுகளுக்கு நிறைய பறவைகள் வலசையாக வருவது வாடிக்கையாகும். மொத்தம் 41 குடும்பங்களைச் சேர்ந்த 177 வகையான (சிற்றினங்கள்) பறவைகள் வந்து செல்கின்றன. இந்தபகுதிகளில் முதலைகளும் அதிகமாக இருக்கின்றன.
இதேபோல் சிதம்பரம் அருகே உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றின் அருகில் உள்ள கிராமங்களில் முதலை ஊருக்குள் புகுந்து வாய்க்காலில் கிடப்பது அடிக்கடி நடக்கின்றன. கொள்ளிடம் பகுதி கரையோர 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் கொள்ளிடம் ஆறுகளில் இருந்தும் வீராணத்தில் இருந்தும் தண்ணீர் திறக்கும் போது புதரில் உள்ள முதலைகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு பெராம்பட்டு, கூத்தன் கோயில், வேளக்குடி அகரம் நல்லூர் பழைய கொள்ளிடம் வாய்க்கால், மற்றும் வல்லம்படுகை கடவாச்சேரி, ஜெயங்கொண்ட பட்டினம், பிச்சாவரம் பகுதிகளுக்கு முதலைகள் வந்து நீந்தி செல்கின்றன.
அப்படி ஊருக்குள் அல்லது ஊருக்கு அருகில் நீர்நிலைகளில் வரும் முதலைகள் தண்ணீரில் இறங்கும் கால்நடைகளை பிடித்து சாப்பிடும் சம்பவம் நடக்கின்றன. உணவு கிடைக்காவிட்டால், ஊருக்குள் முதலைகள் வரும் சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் இந்த பகுதியில் முதலை பண்ணை அமைத்து இந்த பகுதியில் உள்ள முதலைகளை பாதுகாக்கவேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்கு சாலியன் தோப்பு ராஜன் வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் முனியன் மகன் சக்திவேல் (வயது 40) கூலித் தொழிலாளியாவர். இவர் கடந்த 25ம் தேதி அன்று இரவு வழக்கம்போல் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் நள்ளிரவு 2 மணி அளவில் வீட்டு வாசல் கதவை ஏதோ தட்டுவதுபோல் சத்தம் கேட்டிருக்கிறது. இதில் திடுக்கிட்டு எழுந்த சக்திவேல் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தார்.
அப்போது சுமார் 7 அடி நீளமுள்ள ராட்சத முதலை ஒன்று வீட்டு வாசலில் கிடந்ததை கண்டு பதறிப்போனார். பயத்தில் செய்வதறியாது திகைத்த சக்திவேல், வீட்டின் கதவை பூட்டிவிட்டு உடனே சிதம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார்.. சிறிது நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் சுமார் ½ மணி நேர போராட்டத்திற்கு பிறகு முதலையை லாவகமாக பிடித்தார்கள். இந்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications