கடலூரியில் நொடியில் மாறிய மொத்த கதை.. செல்வமணி கையை பிடித்து கெஞ்சியும் கேட்காத காந்தி.. குறுக்கே லதா
கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தில், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மாமனாரைக் கத்தியால் குத்திக்கொலை செய்து, மாமியாரைத் படுகாயப்படுத்திய மருமகனின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு கொலையில் முடிந்த இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கார்குடல் கிராமத்தைச் சேர்ந்தவர் கனிமொழி. இவருக்கும் வடபாதி கிராமத்தைச் சேர்ந்த காந்தி என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தத் தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

கடலூர் காந்தி குடும்பம்
காந்தி கடந்த சில காலமாகவே மதுவுக்கு அடிமையாகி இருந்ததாகவும், இதன் காரணமாகக் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், தனது மனைவி கனிமொழியின் நடத்தையில் காந்திக்குச் சந்தேகம் ஏற்பட்டு வந்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை மீண்டும் தகராறு ஏற்படவே, ஆத்திரமடைந்த கனிமொழி தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு கார்குடல் கிராமத்தில் உள்ள தனது தந்தை செல்வமணி வீட்டிற்குச் சென்றுள்ளார். மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் இல்லாததை அறிந்து ஆத்திரமடைந்த காந்தி, கடும் மதுபோதையில் தனது மாமனார் செல்வமணி வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு வைத்துத் தனது மாமனாருடன் அவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது செல்வமணி, காந்தியைச் சமாதானப்படுத்த முயன்றதாகத் தெரிகிறது.
செல்வமணி கெஞ்சியும் கேட்கல
ஆனால், போதையில் நிதானம் இழந்த காந்தி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரெனத் தனது மாமனார் செல்வமணியைச் சரமாரியாகக் குத்தினார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த செல்வமணியின் மனைவி லதா, தனது கணவரைக் காப்பாற்ற ஓடி வந்து மருமகன் காந்தியைத் தடுக்க முயன்றார். அப்போது ஆத்திரம் குறையாத காந்தி, தனது மாமியார் லதாவையும் கத்தியால் குத்தினார். பெற்றோர் இருவரும் தாக்கப்படுவதைக் கண்டு பயந்துபோன கனிமொழி, தப்பித்து அருகில் உள்ள வீட்டிற்குள் புகுந்து உயிர் பிழைத்தார்.
குறுக்கே வந்த லதா
செல்வமணி மற்றும் லதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதைக் கண்ட காந்தி, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்ட பொதுமக்கள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி செல்வமணி பரிதாபமாக உயிரிழந்தார்.
லதாவிற்கு தற்போது மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தப்பியோடிய காந்தியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
குடும்ப வன்முறைகளுக்கு தீர்வு?
குடும்ப வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சமூகத்தின் ஒரு தீராத நோயாக மாறிவருகிறது. இதற்குத் தீர்வாக, முதலில் மது மற்றும் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராகக் கடுமையான கட்டுப்பாடுகளையும், அடிமையானவர்களுக்கு முறையான மறுவாழ்வு மையங்கள் மூலம் ஆலோசனைகளையும் வழங்க வேண்டும்.
போதையில் நிதானம் இழப்பதே பல வன்முறைகளுக்கு முதன்மைக் காரணமாக இருப்பதால், மது ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு அடித்தட்டு மக்களிடையே ஆழமாகச் சென்றடைய வேண்டும்.. மேலும், கணவன் - மனைவி இடையே ஏற்படும் மனக்கசப்புகளை ஆரம்பத்திலேயே தீர்க்க குடும்ப நல ஆலோசனைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு அவசியமாகும்.
வன்முறையில் ஈடுபடுபவர்களுக்குச் சட்டம் விரைவான மற்றும் கடுமையான தண்டனைகளை வழங்கினால் மட்டுமே மற்றவர்களுக்கு அது ஒரு அச்சத்தைத் தரும்.. எல்லாவற்றிற்கும் மேலாக, பரஸ்பர மரியாதை மற்றும் சகிப்புத்தன்மை கொண்ட வளர்ப்பு முறையை அடுத்த தலைமுறையினரிடம் விதைப்பதும், பொருளாதார நெருக்கடிகளைக் குறைக்க வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் இந்தச் சமூகப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வாக அமையும்..!!!












Click it and Unblock the Notifications