சமூக ஆர்வலர் இளையராஜாவை விரட்டி துப்பாக்கியால் சுட்ட கும்பல்.. ஓபிஎஸ் அணி நிர்வாகி உட்பட 6 பேர் கைது
கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் முன் விரோதம் காரணமாக திமுக நிர்வாகியும், சமூக ஆர்வலருமான இளையராஜா மீது 6 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மணவாளநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. தியாகராஜன். இவரது மகன் இளையராஜா (48) திமுகவில் இருக்கிறார். சமூக ஆர்வலரான இவர் விருத்தாச்சலத்தில் வள்ளலார் குடில் என்ற பெயரில் முதியோர் இல்லம், குழந்தைகள் இல்லம் நடத்தி வருகிறார். இயற்கை விவசாயமும் செய்து வருகிறார்.

இளையராஜாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வழக்கம்போல, நேற்று தனது விவசாய நிலத்துக்கு இளையராஜா சென்றுள்ளார். அப்போது மாலை 5 மணியளவில் அங்கிருந்து திரும்ப கிளம்பியபோது, அங்கு மூன்று ஒரு சக்கர வாகனங்களில் அதே ஊரைச் சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென வந்து, தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் இளையராஜாவை நோக்கிச் சுட்டனர்.
சுதாரித்துக் கொண்ட இளையராஜா, தன் காரில் ஏறி தப்பிக்க முயன்றார். ஆனால் விடாமல் விரட்டிய அந்த கும்பல், கார் கதவு, கண்ணாடி வழியாக சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் இளையராஜாவின் இடுப்பு, கழுத்து, தோள்பட்டை ஆகிய இடங்களில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து காயங்களுடன் இளையராஜாவே காரை ஓட்டிக்கொண்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரிடம் இளையராஜா அளித்துள்ள வாக்குமூலத்தில், மணவாளநல்லூரை சேர்ந்த ராஜசேகரன் மகன் ஆடலரசன் மற்றும் புகழேந்தி உள்ளிட்ட 6 பேர் 3 பைக்கில் வந்தனர். ஆடலரசன் இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தார். சுதாரித்து கொண்ட நான் எனது காரில் ஏறி தப்பிக்க முயன்றேன். அப்போது ஆடலரசன் என் மீது துப்பாக்கியால் சுட்டார். மற்றொருவர் கையிலும் துப்பாக்கி இருந்தது.
நான் காருக்கு உள்ளே சென்று கார் கதவை மூடியதும், என்னை நோக்கி ஓடிவந்த ஒருவர் கார் கண்ணாடி வழியாக மீண்டும் என் மீது துப்பாக்கியால் சுட்டார். காரை வேகமாக ஓட்டிச் சென்று அவர்களிடம் இருந்து தப்பித்து வந்து நான் மருத்துவமனையில் சேர்ந்தேன் என்று போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் இளையராஜா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இளையராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் ஆடலரசன், புகழேந்தி உள்ளிட்ட 6 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. கைதான புகழேந்தி, ஓபிஎஸ் அணியில் கடலூர் மேற்கு மாவட்ட ஐ.டி விங் மாவட்ட செயலாளராக உள்ளார் எனத் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications