வெள்ளத்தில் மலர்ந்த காதல்.. ஆசை வார்த்தை கூறி நெல்லை இளம்பெண்ணை ஏமாற்றிய கடலூர் போலீஸ்காரர்
கடலூர்: நெல்லையில் கடந்த 2023 ஆண்டு வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட போது மீட்பு பணிக்காக சென்ற கடலூரை சேர்ந்த சிறப்பு படை போலீஸ்காரருக்கும், அங்கு கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்த இளம்பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக இளம்பெண் போலீஸ்காரர் மீது பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் சேடப்பாளையம் நாகம்மாள் பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் சம்பத் (வயது 28). இவர் தமிழ்நாடு காவல் சிறப்பு படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். உளுந்தூர்பேட்டை 10-வது பட்டாலியன் தமிழ்நாடு காவல் சிறப்பு படையில் பணி புரிந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு நெல்லையில் மழை வெள்ளம் ஏற்பட்ட போது மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக சம்பத் உள்ளிட்ட சிறப்பு படை போலீஸ்காரர்கள் நெல்லை சென்றனர். அப்போது சம்பத்துக்கும், நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றிய நெல்லையை சேர்ந்த 28 வயது பெண்ணின் அறிமுகம் கிடைத்தது.
இதையடுத்து இருவருக்கும் பழக்கம் அதிகரித்தது. செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டு இருவரும் அடிக்கடி பேசி வந்தனர். நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் ஒன்றாக வெளியே சுற்றியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சம்பத் மீண்டும் உளுந்தூர்பேட்டைக்கு பணிக்கு மாற்றப்பட்டார். அங்கு பணி செய்து வந்த போது இன்ஸ்டாகிராமில் இருவரும் பேசி வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இளம்பெண்ணை கடலூருக்கு அழைத்துள்ளார். சம்பத் அழைத்ததின் பேரில் இளம்பெண்ணும் கடலூர் வந்திருக்கிறார். அப்போது இருவரும் ஒரு விடுதியில் ஒன்றாக 4 நாட்கள் தங்கியதாகவும், அப்போது ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சில நாட்கள் கழித்து திருமணம் தொடர்பான பேச்சை இளம்பெண் எடுத்துள்ளார்.
அப்போது இது தொடர்பாக அவர்களுக்குள் சண்டை வந்துள்ளது. மேலும் சம்பத் இளம்பெண்ணை திருமணம் செய்ய முடியாது என்றும், கெட்ட வார்த்தையில் திட்டி போனை வைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் என்ன செய்வதென்று தெரியாமல், இதுகுறித்து கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தற்போது சம்பத்தை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இளம் பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications