வெந்து போன முகத்துடன் மிரட்டிய பெண்.. பூஜை ரூமில் பதுங்கிய போலீஸ்காரர்.. என்னாச்சு.. மிரளும் கடலூர்
கடலூர் போலீஸ்காரர் தற்கொலைக்கு என்ன காரணம் என்ற விசாரணை நடக்கிறது
கடலூர்: பொதுமக்களுக்கு பயம் வந்தால் போலீசிடம் செல்லலாம்.. அந்த போலீஸ்காரருக்கே பயம் வந்தால்? அப்படித்தான் ஒரு போலீஸ்காரர் விபரீதத்தை தேடி கொண்டுள்ளார்.. என்ன நடந்தது என்று பார்ப்போம்...!
Recommended Video
கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரும்பாக்கம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் பிரபாகரன்.. 33 வயதாகிறது.. கடலூர் ஆயுதப்படை பிரிவில் முதல் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்..
இவரது மனைவி பெயர் விஷ்ணுப் பிரியா.. எழிலவன், தமிழ்மதி என்ற 2 குழந்தைகள் இவர்களுக்கு உள்ளனர்.
2011-ல் பணியில் சேர்ந்த பிரபாகரன், குடும்பத்துடன் கடலூர் ஆனைக்குப்பத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.

உடல்நலம்
கொஞ்ச நாளாகவே, பிரபாகரனுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. அவரது ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைபாடு இருந்து வந்ததாக தெரிகிறது... அதற்காக நிறைய இடங்களில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், உடல்நிலை அவருக்கு சீராகவில்லை.இந்நிலையில், நேற்று பிரபாகரன் மனைவி மற்றும் குழந்தைகளை மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்தார்... வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்தார்..

தற்கொலை
நிகழ்ச்சியை முடித்து கொண்டு, சாயங்காலம் விஷ்ணுப்பிரியா வீட்டுக்கு வந்தார்.. வீடு உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.. எவ்வளவு தட்டியும் கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த விஷ்ணுப்பிரியா, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தார்.. அப்போது பிரபாகரன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்... இதை பார்த்து அலறி கூச்சலிட்டார் விஷ்ணுபிரியா.. உடனடியாக போலீசுக்கும் தகவல் சொல்லப்படவும், அவர்களும் விரைந்து வந்து சடலத்தை மீட்டனர்..

விசாரணை
பிரபாகரன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்றும் தெரியவில்லை.. இதனிடையே விஷ்ணுப்பிரியா கடலூர் புதுநகர் போலீசில் இதுகுறித்து புகார் செய்தார்... போலீசாரும் விசாரணையை ஆரம்பித்தனர்.. ஏற்கனவே உடல்நல பாதிப்பு இருந்ததால், அதுதான் காரணமாக இருக்குமோ? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

பேய் பயம்
அப்போதுதான் ஒரு உண்மை தெரியவந்தது.. இப்போது பிரபாகரன் குடியிருக்கும் அந்த குவார்ட்டஸில், ஒரு பெண் சில வருடங்களுக்கு முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டாராம்.. இங்கு குடிவரும்போதே, இந்த விஷயத்தை யாரோ பிரபாரகனுக்கு சொல்லி உள்ளதாக தெரிகிறது.. அப்போது முதலே பேய் பயம் பிரபாகரனுக்கு தொற்றி கொண்டுவிட்டது. அப்போது முதலே இவருக்கு கனவில் ஒரு பெண் வந்து மிரட்டி கொண்டே இருந்தாராம்..

வெந்து போன முகம்
அந்த பெண் தீயில் எரிந்து, வெந்து போய் கருகிய முகத்துடன் கனவில் வருகிறார் என்றும், விகார முகத்தை காட்டியே தன்னை போட்டு அமுக்குவதாகவும், கழுத்தை நெரிப்பதாகவும் பிரபாகரன் குடும்பத்தினரிடம் தெரிவித்து வந்திருக்கிறார்.. அந்த பெண் தினமும் இப்படி கனவில் வருவதால், ஒருவேளை தனக்கு பேய் பிடித்திருக்கலாம் என்றும் பிரபாகரன் சந்தேகப்பட்டார்.. இதற்காக பேய் ஓட்டுபவர்கள், குறி சொல்பவர்களை தேடி தேடி செல்ல ஆரம்பித்துள்ளார்..

மெடிக்கல் லீவு
இதற்காகவே ஏராளமான முனீஸ்வரன் கோயில்களுக்கும் சென்று, கைகளில் கயிறுகளையும், தாயத்துகளையும் வாங்கி கட்டிக் கொண்டுள்ளார். நாளுக்கு நாள் பேய் பீதி அதிகரித்து வந்ததால், தன்னுடைய வேலையையும் ஒழுங்காக கவனிக்க முடியாத நிலைமை வந்துள்ளது.. அதற்காக 15 நாள் மெடிக்கல் லீவும் எடுத்துள்ளார்.. இந்த 15 நாட்களுமே பூஜை ரூமிலேயே பதுங்கி இருந்தாராம் போலீஸ்காரர் பிரபாகரன்.. அதற்கு பிறகு ஓரளவு தைரியம் வந்ததும், மறுபடியும் டியூட்டிக்கு சென்றுள்ளார்..

அதிர்ச்சி
ஆனால் மறுபடியும் அந்த பெண் கனவில் வந்துவிட்டாராம்.. அந்த பெண்ணுக்கு பயந்தே இப்படி தற்கொலை வரை சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.. பிரபாகரனுக்கு இருட்டை கண்டும் பயம் இருந்ததாக சக போலீசாரே தெரிவிக்கின்றனர்.. கனவில் பேய் மிரட்டுவதாக பயந்து, தூக்கிட்டு தற்கொலை செய்தது கொண்ட பிரபாகரனின் மரணம் கடலூர் காவல்துறையில் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications