கடலூர் ரயில் விபத்து.. பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாணவர் விஷ்வேஸ் டிஸ்சார்ஜ்
கடலூர்: கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேட் கீப்பர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த புதிய கேட் கீப்பர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பலத்த காயமடைந்த மாணவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மாணவர் விஷ்வேஸ் இன்று டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.
கடலூர் மாவட்டம், செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த மூன்று மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். செம்மங்குப்பம் அருகே தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன் ரயில்வே கேட்டை கடக்க முயன்றது.

அப்போது, திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் இந்த விபந்து நேரிட்டது. இந்த விபத்தில், சாருமதி (16), விமலேஷ் (10), செழியன் (15) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். கேட் கீப்பர் மது அருந்தியிருந்ததாகவும், கேட்டை மூட மறந்துவிட்டு தூங்கியதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், கேட் கீப்பர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், அவருக்கு மொழி புரியாததால் ஏற்பட்ட கவனக்குறைவாலேயே இந்த விபத்து நேரிட்டதாகவும் அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர். மேலும், தமிழகத்தைச் சேர்ந்தவரை புதிய கேட் கீப்பராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இதைத்தொடர்ந்து, செம்மங்குப்பம் பகுதிக்கு இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஆனந்த்ராஜ் என்பவர் புதிய கேட் கீப்பராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்துக்கு தலா 5 லட்சமும், பலத்த காயமடைந்த மாணவர்களின் குடும்பத்துக்கு ரூ. 1 லட்சமும். லேசாக காயமடைந்த மாணவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் விபத்தில் உயிரிழந்த விமலேஷின் உடல் அவரது பெற்றோர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாணவரான விமலேஷின் சகோதரரான விஷ்வேஸ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications