ரேஷன் கடை அரிசியில் பிளாஸ்டிக் அரிசி? கடலூரில் கிராம மக்கள் புகார்.. உண்மை என்ன! பரபர
கடலூர்: தமிழ்நாடு அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்துள்ளதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்
இந்தியாவிலேயே மிகவும் வலுவான ஒரு பொது விநியோக திட்டத்தைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. கடந்த காலங்களில் தமிழ்நாடு வளர்ச்சிக்கும் கூட இந்த பொது விநியோக திட்டம் காரணமாக இருக்கிறது.
பொது விநியோக திட்டத்தின் கீழ் பயன் பெற்ற பலரை நம்மால் பார்க்க முடியும்.. பசி என்ற மிகப் பெரிய விஷயத்தை போக்கியதே நமது பொது விநியோக திட்டத்தின் மாபெரும் சாதனையாக இருக்கிறது.
பொது விநியோக திட்டம்: இதன் பயனை நமது ஆட்சியாளர்கள் உணர்ந்தே உள்ளனர். இதன் காரணமாகவே முந்தைய ஆட்சியாளர்களால் கொண்டு வரப்பட்டது என நிறுத்தாமல், அவற்றை இவர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். உதாரணமாகக் கடந்த 2006 தேர்தல் சமயத்தில் ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது. ஆட்சிக்கு வந்த பிறகு ரேஷன் கடைகளில் முதலில் இரண்டு ரூபாய்க்கு வழங்கப்பட்டது.

சில காலத்திலேயே ரேஷன் அரிசி ஒரு ரூபாய்க்கும் அதைத் தொடர்ந்து இலவசமாகவும் அளித்தது. இதனால் பல கோடி மக்கள் பெரியளவில் பயன் பெற்றனர். இதன் காரணமாகவே அதற்குப் பின் வந்த ஆட்சியாளர்களும் இந்த திட்டத்தைத் தொடரவே செய்தனர். இந்தளவுக்கு பொது விநியோக திட்டத்தில் நாம் வலுவாக இருக்கிறோம்.
இங்கே ஒவ்வொரு மாதமும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அரிசி வழங்கப்படுகிறது. இருப்பினும், இந்த ரேஷன் அரிசி உரியத் தரத்தில் இல்லை என்ற புகார் அவ்வப்போது எழுவது வழக்கம் இதைத் தடுக்க அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தே வருகிறது. இதனிடையே கடலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் ரேஷன் அரிசி குறித்து புதிய புகாரை முன்வைத்துள்ளனர்.
கடலூர்: கடலூரில் திட்டக்குடி அடுத்துள்ள ஆலம்பாடி கிராமத்தில் வழக்கம் போல இந்த மாதம் அரிசி வழங்கப்பட்டுள்ளது.. இதற்கிடையே அதில் பிளாஸ்டிக் அரிசி கலக்கப்படுவதாகத் தகவல் பரவியதால் அங்குள்ள பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சமீப காலமாகவே அங்கே ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசி நீளமான வெள்ளை நிறத்தில் இருப்பதாகவும் சில அரிசிகள் மட்டும் நீரில் ஊற வைக்கும் போது மிதந்து மேலே வருவதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும், அடுப்பில் வைத்துச் சமைக்கும் போதும் அது அப்படியே இருப்பதாகக் கூறுகின்றனர். இதனால் ரேஷன் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலக்கப்படுவதாகத் தகவல் பரவிய நிலையில், ஆலம்பாடி கிராம அச்சத்தில் இருக்கிறார்கள். ரேஷன் அரிசியில் செறிவூட்டப்பட்ட அரிசி கலக்கப்படுகிறதா என்பதிலும் குழப்பம் நிலவுகிறது.
பிளாஸ்டிக் அரிசி: அதேநேரம் அரிசியில் பிளாஸ்டிக் அரிசியைக் கலைப்பதற்கு வாய்ப்பு குறைவு என்றே வல்லுநர்கள் கூறுகின்றனர். இப்படி பிளாஸ்டிக் அரிசியைக் கலைப்பதால் செலவு அதிகரிக்கவே செய்யும் என்றும் இதனால் யாரும் பிளாஸ்டிக் அரிசியைக் கலைக்க மாட்டார்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், பிளாஸ்டிக் அரிசி குறித்து மக்கள் அச்சத்தைப் போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications