கடலூர் விருத்தாசலம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, ஏட்டு சிவசக்தி ஆகியோர் சஸ்பெண்ட்
கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு படித்து வந்த 17 வயது சிறுமியை சமீபத்தில் 17 வயதுடைய சிறுவன் திருமணம் செய்து கொள்வதாக கூறி அத்துமீறினாராம். இது பற்றி சிறுமி விருத்தாசலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அப்போது போக்சோ வழக்கில் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார் எழுந்தது. இதையடுத்து விருத்தாசலம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு படித்து வந்த 17 வயது சிறுமியை சமீபத்தில் 17 வயதுடைய சிறுவன் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அத்துமீறினாராம். அதேபோல் சிறுமியின் உறவினர் ஒருவரும் அவரை மிரட்டி பலமுறை அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இது பற்றி சிறுமி விருத்தாசலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 17 வயது சிறுவன், சிறுமியின் உறவினர், தாய் உள்பட மேலும் சிலரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சிறுமியை 17 வயது சிறுவன், சிறுமியின் உறவினர் ஆகிய 2 பேர் பலாத்காரம் செய்ததும், அதற்கு உடந்தையாக சிறுமியின் தாய் இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், அவர்கள் 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட 3 பேரை போலீசார் விடுவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. விடுவித்த 3 பேரிடமும், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, ஏட்டு சிவசக்தி ஆகியோர் லஞ்சம் கேட்டு பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்த விவகாரம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரின் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து அவர் ரகசிய விசாரணை நடத்தினார். இந்த நிலையில் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஏட்டும், எழுத்தருமான சிவசக்தியை பணியிடை நீக்கம் செய்து எஸ்பி நடவடிக்கை எடுத்தார்.
மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.க்கு பரிந்துரை செய்தார். இதை ஏற்ற டி.ஐ.ஜி. திஷா மித்தல், விருத்தாசலம் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இச்சம்பவம் கடலூர் மாவட்ட போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications