கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும்.. வாக்குறுதி அளித்த எடப்பாடி பழனிசாமி
கடலூர்: "2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைந்தபின் மீண்டும் விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள் வழங்கப்படும்" என கடலூரில் மக்கள் மத்தியில் பேசுகையில் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று மாலை கடலூரில் "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" பரப்புரை பயணம் மேற்கொள்கிறார். முன்னதாக புதுச்சேரி பூரனாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தொழில் முனைவோர் மீனவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுநல சங்கங்களை சேர்ந்தவர்களை பகலில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

அவர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "நான் ஆட்சியில் இருந்த நான்கு ஆண்டு காலம் இக்கட்டானது. வறட்சி புயல் கொரோனா உள்ளிட்ட மூன்று இக்கட்டான சூழ்நிலைகளும் சமாளித்து அரசுக்கு வரக்கூடிய வருவாய் வைத்து ஒரு சிறப்பான ஆட்சியைக் கொடுத்தோம். நான் ஆட்சி செய்த போது பிரச்சினைகளை சந்தித்த போதும் மக்கள் குறையில்லாமல் வாழ்ந்தார்கள்.
இந்த ஆட்சியில் மக்கள் மற்றும் வியாபாரிகள் சிறுகுறு தொழில் புரிபவர்கள் மற்றும் பல அமைப்பு சேர்ந்தவர்களுக்கு நிகழும் சிக்கல்களை, கருத்துக்களை பதிவு செய்துள்ளீர்கள். இவற்றை எப்படி சரி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறீர்கள். அதிமுக ஆட்சியில் இருக்கும் போது எம்.சி.சம்பத் மூலம் ஆட்சியர் அலுவலகம் வர இருந்த இடம் கையகப்படுத்தப்பட்டு பேருந்து நிலையம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால் நகரின் மையப்பகுதியில் இருக்க வேண்டிய பேருந்து நிலையம் மாற்றப்பட்டுள்ளது. மக்களுக்காக ஆட்சியாளர்கள் இருக்க வேண்டுமே தவிர ஆட்சியாளர்களுக்காக மக்கள் இருக்கக் கூடாது.
மக்கள் விரும்பக்கூடிய இடத்தில் பேருந்து நிலையத்தை அமைக்காமல் மாற்று இடத்தில் அமைப்பது கண்டிக்கத்தக்கது. அதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதற்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியில் அந்த திட்டத்தை ஸ்டாலின் அரசு மாற்றுவது சரியானது அல்ல. எனவே வருகிற 15ஆம் தேதி அந்த பேருந்து நிலையம் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறவழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். என்றென்றும் மக்களுடன் அதிமுக துணை நிற்கும்.
அடிப்படையில் நான் ஒரு விவசாயி. இன்றும் நான் விவசாயம் தான் செய்து கொண்டிருக்கிறேன். விவசாயம் செழித்தால் எல்லா தொழிலும் சிறப்பாக நடக்கும். கடலூர் மாவட்டத்தில் பிரதான தொழிலாக இருப்பது வேளாண் தொழில் அடிக்கடி கனமழை வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதி கடலூர் பகுதி. இங்கு பலா மரங்கள், முந்திரி மரங்கள் சாய்ந்தது. அவற்றையெல்லாம் அரசு வந்து வெட்டி அகற்றி சரி செய்தது. பல வழியிலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது." என்றார்.
மேலும், 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைந்தபின் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு மீண்டும் விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள் வழங்கப்படும். திமுக எந்தெந்த திட்டங்களை நிறுத்தியதோ அத்துணை திட்டங்களையும் மீண்டும் தமிழக மக்களுக்கு வழங்குவோம். வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தலில் அனைத்து தரப்பினரும் அதிமுகவிற்கு ஆதரவு தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி.












Click it and Unblock the Notifications