வேங்கைவயல் டூ நாங்குநேரி.. தமிழகத்தில் அதிகரித்த சாதிய பாகுபாடு.. லிஸ்ட் போட்ட ஆளுநர் ஆர்என் ரவி
கடலூர்: 100 தலித்கள் பூணூல் அணியும் விழாவில் இன்று ஆளுநர் ஆர்என் ரவி பங்கேற்ற நிலையில் வேங்கைவயல், நாங்குநேரி சம்பவங்களை குறிப்பிட்டு தமிழகத்தில் சாதிய பாகுபாடு என்பது அதிகரித்து வருகிறது என பரபரப்பாக பேசினார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் காட்டுமன்னார் கோவில் அருகே ஆதனூர் கிராமத்தில் இன்று நந்தனார் குருபூஜை விழா நடந்தது. விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி பங்கேற்றார். இதில் 100 ஆதிதிராவிடர்களுக்கு பூணூல் அணிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து ஆளுநர் ஆர்என் ரவி முன்னிலையில் 100 ஆதிதிராவிடர்கள் பூணூல் அணிந்து கொண்டனர். மேளதாளங்கள், மந்திரங்கள் முழங்க ஆதிதிராவிடர்கள் பூணூல் அணிந்து கொண்டனர். இந்த விழாவில் ஆளுநர் ஆர்என் ரவியுடன் ஸோகோ நிறுவனத்தின் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி பேசியதாவது: ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் மீது சாதிய கொடுமைகள் நடக்கும்போது நாம் தலை நிமிர்ந்து வாழ முடியாது. பூணூல் அணியும் நிகழ்வில் நானும் கலந்துகொண்டேன். இதில் நீங்கள் வேறு, நான் வேறு என்றால் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தப் பிரிவுகளை மறந்து நாம் ஒன்றாக இருக்க வேண்டும். நம் பிரதமர் அனைவரையும் தனது சொந்த மக்களாக நினைத்து பாடுபட்டு வருகிறார். அனைவரும் ஒரே குடும்பமாக நடத்தப்படுகின்றனர். இந்த சிந்தனை மகாகவி பாரதியாருடையது.
மறுபுறம் நாட்டு மக்களை மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் பிரித்து ஒரு வகையான அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. பாரதியார் வரிகள் போல இந்த நாட்டில் ஒரே குடும்பமாக நாம் அனைவரும் கைகோர்த்து இருக்க வேண்டும். இதனால் நல்ல எதிர்காலம் வரும். அதிகபட்ச வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவது இல்லை, தண்டிக்கப்படுவதில்லை.
ஆகவே, இந்தக் குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்து கொண்டிருக்கின்றது. கேவலமாக, வன்மையாக கண்டிக்கத்தக்கக் கூடிய ஒரு குற்றச் செயல்தான் பாலியல் வன்கொடுமை. அந்தக் குற்றச் செயலில் ஈடுபடுபவர்கள் 100 பேரில் வெறும் 7 சதவீதம் பேர் மட்டும்தான் தண்டிக்கப்படுகிறார்கள். தவிர மீதம் உள்ள 93 சதவீதம் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டு விடுகிறார்கள்.
மேலும், சாதிய வன்கொடுமைகள் எந்த அளவுக்கு மோசமாக சென்றுவிட்டது என்றால், தமிழகத்தில் வேங்கைவயலில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடிக்கின்ற மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலத்தை கலக்கின்றார்கள். நாங்குநேரியில் பள்ளி மாணவன் நன்றாக படிக்கிறான் என்பதற்காக மாற்று சமுதாய மாணவர்கள் வீடு புகுந்து கடும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த மாதிரி கொடுமைகள் தமிழகத்தில்தான் தற்போது அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.
பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் தங்களை வித்தியாசப்படுத்தி கொள்வதற்காக தங்களுடைய சாதியின் அடிப்படையில் கலர், கலராக கயிறுகளை கையில் கட்டி ஒருவரிடம் இருந்து ஒருவர் வித்தியாசப்படுத்தி கொற்கின்றனர். இது எந்த மாதிரியான கலாச்சாரம் என தெரியவில்லை. கலாசார சீரழிவு ஏற்பட்டுள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications