கடலூர் ரயில் விபத்து.. தொலைபேசி அழைப்பை எடுக்காமல் தூங்கிய கேட் கீப்பர்.. விசாரணையில் அம்பலம்!
கடலூர்: கடலூர் செம்மங்குப்பம் அருகே நடந்த பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், நேற்று பயணிகள் ரயில் கடக்கும் முன் தொலைபேசியில் அழைப்பு வந்த போதும் கூட, கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பதில் அளிக்கவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது.
கடலூர் செம்மங்குப்பம் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு கேட் கீப்பர் பங்கஜ் சர்மா ரயில்வே கேட்டை மூடாததே காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். அதேபோல் தனியார் பள்ளி வேன் ஓட்டுநர், ரயில்வே கேட் மூடப்படவில்லை என்று கூறி இருந்தார்.

ரயில்வே அறிக்கை
ஆனால் ரயில்வே நிர்வாகம் தரப்பில், காலை 7.05 மணிக்கே ரயில்வே கேட் மூடப்பட்டுவிட்டது. ஆனால் இருசக்கர வாகன ஓட்டிகள் ரயில்வே கேட்டை திறக்க அழுத்தம் கொடுத்ததால், பங்கஜ் சர்மா கேட்டை திறந்திருக்கிறார். இதனால் பொதுமக்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று விளக்கம் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து பங்கஜ் சர்மா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
தமிழர் கேட் கீப்பராக நியமனம்
தொடர்ந்து கடலூர் சிறையில் பங்கஜ் சர்மா அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பங்கஜ் சர்மா பணியாற்றிய ரயில்வே கேட் பகுதிக்கு கேட் கீப்பராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆனந்தராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா நேற்று ரயில் வந்த போது தூங்கியதையும் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
தொலைபேசியை எடுக்காத கேட் கீப்பர்
அதன்படி, கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை 22ஆம் தேதி வரை கடலூர் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நிலைய அதிகாரி விமல் பயணிகள் ரயில் புறப்பட்ட உடன் உடனடியாக ரயில்வே கேட்டை மூடுவதற்காக தொலைபேசியில் அழைத்துள்ளர்.
தூங்கியதை ஒப்புக்கொண்ட பங்கஜ் சர்மா
அப்போது அந்த தொலைபேசியை பங்கஜ் சர்மா எடுக்கவில்லை என்று விசாரணை அதிகாரி கூறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பங்கஜ் சர்மா தொலைபேசியை எடுக்காமல் உறங்கிவிட்டதும் தெரிய வந்துள்ளது. விபத்து நடந்த பின் உடனடியாக நிலைய அதிகாரி விமலுக்கு தொடர்பு கொண்டு விபத்து நடந்துவிட்டது.. நான் கேட்டை மூடவில்லை என்பதையும் ஒப்புக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.
எது உண்மை?
அப்போது மக்களிடம் இருந்து தப்பிக்க ஓடிய போது காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் மக்கள் பிடித்து அடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து என்ன செய்வதென தெரியாமல் பங்கஜ் சர்மா கேட் கீப்பர் நிலையத்திற்குள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலமாக நேற்று ரயில்வே நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ள அறிக்கைகள் உண்மையா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications