காளியம்மன் கோயிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை! மரியாதை செலுத்திய பக்தர்கள்! சிதம்பரத்தில் நெகிழ்ச்சி
கடலூர்: சிதம்பரத்தில் காளியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை எடுத்து வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமியர்களுக்கு இந்துக்கள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.
இந்துக்கள் இஸ்லாமியர்கள் நல்லிணக்கத்திற்கு தமிழ்நாடு பெயர் பெற்ற மாநிலமாகும். பல்வேறு ஊர்களில் இந்துக்களின் திருவிழாக்களில் இஸ்லாமியர்கள் பங்கேற்று சிறப்பிப்பதும், இஸ்லாமியர்களுடன் இந்து மக்கள் உறுதுணையாக இருப்பதும் தமிழ்நாட்டில் காலங்காலமாக நடந்து வருகிறது. இப்படி இருக்கையில் இதற்கு உதாரணமாக மற்றொரு சம்பவம் நடந்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளையில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலின் ஸ்தல வரலாறை பொறுத்த அளவில்,
"விவசாயத்தை பாதுகாக்கும் காவல் தெய்வமாக விளங்கிய காளியம்மன், விவசாயி கனவில் தோன்றி, தான் இங்கு உள்ள புளியமரத்தில் குடி கொண்டுள்ளதாகவும், கோயில் கட்ட சொல்லியுள்ளார். அப்பகுதியினர் மறுத்து, புளிய மரத்தை வெட்டிய போது மரத்தில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது. அதன்பின் மரத்தை எடுத்துச் சென்று ஒரு இடத்தில் அடுக்கினர். அப்போது அந்த மரம் தளிர் விட்டு மரமாகியது.

அதன் பின் அப்பகுதியினர் அச்சமடைந்து படையல் நடத்தினர். அப்போது ஒருபெண் மூலம் அருள் வாக்காக காளியம்மன் தோன்றி தான் விவசாயத்தை பாதுகாப்பதாகவும், தனக்கு கோயில் கட்டி, விழா நடத்தினால் நோய் நொடிகளை தீர்த்து சுகம் அளிப்பதுடன் திருமணத்தடை மற்றும் புத்திர பாக்கியம் அளிப்பதாக கூறி மறைந்துள்ளார். அதன் பின் அப்பகுதியினர் வரி வசூல் செய்து கோயில் கட்டி பராமரித்து வருகின்றனர்" என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்த கோயிலுக்கு ஆண்டு தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் கோயில் புதுப்பிக்கப்பட்டு இன்று குடமுழுக்கு நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடைபெற்றிருப்பதால் கிள்ளையை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர்.

கிராம மக்கள் பழம், பூ, தேங்காய் என சீர்வரிசை தட்டுக்களை எடுத்து வந்திருக்கிறார்கள். மறுபுறும் நேற்றிக்கடன் வேண்டிக்கொண்டவர்கள் ஆடுகளை வெட்டி சாமியை வழிபாடு செய்திருக்கன்றனர். இந்த திருவிழாவில் இஸ்லாமியர்கள் சீர்வரிசை எடுத்து வந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீர்வரிசையை பெற்றுக்கொண்ட கிராம மக்கள் இஸ்லாமியர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.
இது குறித்து பக்தர்கள் கூறுகையில், "நாங்கள் இந்த ஊரில் நல்ல நண்பர்களாக பழகி வருகின்றோம். எங்கள் திருவிழாவுக்கு அவர்கள் வருகை தந்தது மகிழ்ச்சியளிக்கிறது. நாங்கள் அவர்களுடைய விழாக்களுக்கு சென்று வருகிறோம். தற்போது அவர்களுக்கு நாங்கள் மரியாதை செய்திருக்கிறோம்" என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications