சிதம்பரம் லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளர் யார்? திருமாவளவனை எதிர்கொள்ள வியூகம்!
கடலூர்: லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 9 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இந்நிலையில், சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனுக்கு எதிராக "வெயிட்டான" வேட்பாளரை இறக்க பாஜக திட்டமிட்டு வருகிறது.
தமிழகத்தில் எப்படியாவது வெற்றி பெற்றேயாக வேண்டும் என்று பாஜக இந்த முறை தீவிர முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தென் சென்னை வேட்பாளராக போட்டியிடுகிறார்.
அதேபோல மாநிலங்களவை எம்பியாக இருக்கும் எல்.முருகன் நீலகிரி தனி தொகுதியில் போட்டியிடுகிறார். நெல்லையில் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். குமரியில் பொன்.ராதாகிருஷ்ணனும், கோவையில் அண்ணாமலையும், கிருஷ்ணகிரியில் நரசிம்மன் ஆகியோர் என கூட்டணி கட்சிகளுடன் 9 தொகுதிகளில் பாஜக முதற்கட்டமாக களமிறங்கியுள்ளது.

இந்நிலையில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாக இருக்கிறது. இதில், சிதம்பரம் (தனி) தொகுதியில் யாரை களமிறக்குவது என கட்சி ஆலோசித்து வருகிறது. இந்நிலையில், காட்டுமன்னார்கோயில் உட்பட சிதம்பரம் தொகுதியிலுள்ள பாஜகவினர், கே.வி.எம்.எஸ்.சரவணகுமாருக்கு ஆதரவளித்துள்ளனர்.
இவர் பாஜக பட்டியலணியின் மாநில துணை தலைவராக இருந்து வருகிறார். இதுவரை ஜெயித்த பல பிற வேட்பாளர்கள் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர். ஆனால் சரவணகுமார், மண்ணின் மைந்தர் என்பதால் அவருக்கு ஆதரவு தருகிறார்கள் உள்ளூர் பாஜகவினர். காட்டுமன்னார்கோயில் வாக்குகள் திருமாவளவனுக்கு கடந்த முறை கிலி ஏற்படுத்தியது. ஆனால் அந்த பகுதி மக்களின் வாக்குகள் சிந்தாமல் இந்த முறை பாஜகவுக்கு கிடைக்கும் என்றும், இதன் மூலம் பாஜக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று பாஜக நிர்வாகியாக இருக்கும் தடா பெரியசாமிக்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. எனவே கே.வி.எம்.எஸ்.சரவணகுமாரை வேட்பாளரை அறிவிக்க பாஜக தயாராகி வருகிறது. திருமாவளவனுக்கு இவர் டஃப் கொடுப்பார் என்றும் அக்கட்சி கருதுகிறது.
சரவணகுமாரை பொறுத்த அளவில், ஏற்கெனவே அதிமுக-காங்கிரஸ் கூட்டணியில் கடந்த 1996ம் ஆண்டு காங்கிரஸ் சார்பாக மங்களூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிருக்கிறார். அப்போது கடலூர் மாவட்டத்தின் சட்டமன்ற தொகுதிகளில் மங்களூரும் ஒன்றாக இருந்தது. இப்படியாக நீண்டகாலமாகவே, உள்ளூர் பகுதியில் பிரபலமானவர் என்பதால் சரவணகுமாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் சிதம்பரம் தொகுதி பாஜகவினர்.












Click it and Unblock the Notifications