கடலூரில் பாமக "பந்த்" அறிவிப்பு.. நள்ளிரவில் பஸ் கண்ணாடி உடைப்பால் பதற்றம்..7 ஆயிரம் போலீஸ் குவிப்பு
என்எல்சி நிறுவனத்தின் நில அபகரிப்பை கண்டித்து, பாமக சார்பில் கடலூர் மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அங்கு 7 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர்: என்எல்சி நிறுவனத்தின் நில அபகரிப்பை கண்டித்து, பாமக சார்பில் கடலூர் மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்து உள்ளார். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூரில் 7 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தில் 3 நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன.
இந்த நிலையில், சுரங்க விரிவாக்க பணிகளை மேற்கொள்ள என்எல்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக அங்குள்ள வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நிலத்தை என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்தி உள்ளது.

விவசாயிகள் போராட்டம்
என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீடு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் போராட்டங்கள் நடத்தி வந்தனர். இதனால், நிலக்கரி சுரங்க விரிவாக்க பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இது தொடர்பாக என்எல்சி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியும் சிலருக்கு உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு மத்தியில், வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுரங்க விரிவாக்க பணியை கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கியது.

விரிவாக்க பணியை நிறுத்த கோரி...
முதல் கட்டமாக எல்லை வரையறை செய்யும் பணிகளை என்எல்சி தொடங்கியது. என்எல்சியின் இந்த நடவடிக்கையை கண்டித்து நேற்று முன்தினம் பாமக, கிராம மக்கள் தரப்பில் போராட்டங்கள் நடைபெற்றது. இதற்கிடையே, நேற்று சேத்தியாத்தோப்பு அருகே என்எல்சி சுரங்க விரிவாக்க பணியை நிறுத்த கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. உள்பட 77 பேர் கைது செய்யப்பட்டனர். அடுத்தடுத்த இந்த விவகாரங்களால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

பாமக சார்பில் முழு அடைப்பு
இந்த நிலையில், என்எல்சி நிறுவனத்தின் நில அபகரிப்பை கண்டித்து, பாமக. சார்பில் கடலூர் மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்து உள்ளார். ஆனால் மாவட்டத்தில் வழக்கம் போல் இன்று பேருந்துகள் ஓடும், அனைத்து கடைகளும் திறந்து இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

7 ஆயிரம் போலீசார் குவிப்பு
பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நெய்வேலியை சுற்றி உள்ள போலீஸ் உட்கோட்டங்களில் பாதுகாப்பு பணியில் போலீஸ் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடையடைக்க வேண்டும் என்று வற்புறுத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாதுகாப்பு பணியில் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் 8 போலீஸ் சூப்பிரண்டுகள்,11 உதவி போலீஸ் சூப்பிரண்டுகள், 21 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும்
பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ள சூழலில், கடலூர் மாவட்டத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்கங்களை சேர்ந்த 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். கடலூரில் கடைகள், பேருந்துகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பஸ் கண்ணாடி உடைப்பு
இதற்கிடையே, கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நள்ளிரவில் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இன்று முழு அடைப்புக்கு அழைக்கப்பட்டு இருந்தாலும் 100 சதவீத பேருந்துகள் மாவட்டத்தில் இயக்கப்படுகின்றன. மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகள் 50 சதவீதம் இயங்குகின்றன. கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications