புதுவையில் எதிரொலிக்கும் பாமகவின் பந்த்.. பேருந்துகள் கடலூர் மாவட்ட எல்லையில் நிறுத்தம்
கடலூரில் பந்த் அறிவிப்பால் புதுவையில் இருந்து வரும் பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்படுகின்றன.
கடலூர்: கடலூரில் பந்த் அறிவிப்பால் புதுவையில் இருந்து வரும் பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்படுகின்றன. புதுவையில் இருந்து கடலூருக்கு வரும் பேருந்துகள் மாநில எல்லையான முள்ளோடையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் புதுவையில் இருந்து வந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனம், சுரங்க விரிவாக்க பணிகளை மேற்கொள்ள முடிவு செய்தது.
இதற்காக அங்குள்ள வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நிலத்தை என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்தியுள்ளது.

நிலக்கரி சுரங்க விரிவாக்க பணி
என்.எல்.சி நிர்வாகம் இப்படி கையகப்படுத்திய நிலத்திற்கு உரிய இழப்பீடு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் போராட்டங்கள் நடத்தி வந்தனர். இதனால், நிலக்கரி சுரங்க விரிவாக்க பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இது தொடர்பாக என்எல்சி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியும் சிலருக்கு உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

முழு அடைப்பு போராட்டம்
இதற்கு மத்தியில், வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுரங்க விரிவாக்க பணியை கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கியது. முதல் கட்டமாக எல்லை வரையறை செய்யும் பணிகளை என்எல்சி தொடங்கியது. என்எல்சியின் இந்த நடவடிக்கையை கண்டித்து நேற்று முன்தினம் பாமக, கிராம மக்கள் தரப்பில் போராட்டங்கள் நடைபெற்றது. இந்த நிலையில், என்எல்சி நிறுவனத்தின் நில அபகரிப்பை கண்டித்து, பாமக. சார்பில் கடலூர் மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்தார்.

பஸ்கள் வழக்கம் போல இயங்கின
அதன்படி இன்று கடலூரில் பாமக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. எனினும், கடலூரில் பெரும்பாலான கடைகள் திறந்தே உள்ளன. ஒரு சில கடைகள் மட்டுமே மூடப்பட்டிருந்ததை காண முடிந்தது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல இயங்கின. போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் புதுவையை ஒட்டி உள்ளதால், இந்த பந்த் புதுவை பகுதியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுவையில் இருந்து கடலூருக்கு பல தனியார் இருந்துகள் இயங்குகின்றன. காலையில் இருந்து மாலை வரை பரபரப்பாக இந்த பேருந்துகள் எப்போதும் சென்று கொண்டிருக்கும்.

பயணிகள் கடும் சிரமம்
இந்த நிலையில், கடலூரில் பந்த் அறிவிப்பால் புதுவையில் இருந்தும் பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்படுகின்றன. புதுவையில் இருந்து கடலூருக்கு வரும் பேருந்துகள் மாநில எல்லையான முள்ளோடையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் புதுவையில் இருந்து வந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். எல்லையில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் ஆட்டோக்கள் மூலம் கடலூருக்கு வந்தனர். இதனால், கடலூரில் இருந்து புதுவைக்கு வரும் பயணிகளை ஏற்றி செல்வதற்காக எல்லையில் பேருந்துகள் காத்திருக்கின்றன.

இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை
இதனிடையே, பந்த் காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதும் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் ரோந்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாமகவினர் 56 பேரை போலீசார் கைது செய்தனர். மந்தாரக்குப்பம் பகுதியில் கடைகளை அடைக்கும் படி கூறிய பாமக நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தாலும் கடலூரில் பேருந்துகள் இயங்குவதாலும் கடைகள் திறந்து இருப்பதாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதாக பாதிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications