கள்ளக்குறிச்சி கலவரம்.. வன்முறையாளர்களை பிடிக்க "நம்பர் பிளேட்!" போலீஸ் ஸ்கெட்ச்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலவரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களின் பதிவெண்கள் மூலம் அதன் உரிமையாளர்களை தேடும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் இயங்கி வந்த தனியாா் பள்ளி மாணவி இறப்பு தொடா்பாக, நீதிகேட்டு மாணவியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 67க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையானது. பள்ளி வாகனங்கள் மட்டுமின்றி, காவல்துறையினரின் வாகனங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இதுதொடர்பாக 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மாணவி மர்ம மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, கள்ளக்குறிச்சி கலவரத்தை விசாரிக்க 18 காவல்துறை அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவினர், சம்பவம் நடைபெற்ற கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பள்ளியில் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு காட்சிகளை பதிவு செய்தனர்.
மேலும், பள்ளி வளாகம், வகுப்பறைகள், மாணவி இறந்து கிடந்த இடம், பள்ளி தாளாளர் வீடு உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. கலவரத்தின் போது எரிக்கப்பட்ட போலீஸ் வாகனங்கள், பள்ளி பேருந்துகளில் தடயங்களை சேகரிக்கும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி பள்ளியில், மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டனர்
இதனிடையே, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் கடந்த 14-ம் தேதி ஏற்பட்ட வன்முறையின்போது 141 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால் இதுவரை இருசக்கர வாகனங்களின் உரிமையாளர்கள் யாரும் தங்களது வாகனங்களை திரும்பப் பெற முன் வரவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
வாகனங்களை திரும்ப வாங்க வந்தால், வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி கைது செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாக, வாகனங்கள் பெறுவது தொடர்பாக காவல் நிலையத்தை யாரும் அணுகவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே, பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களின் பதிவெண்களை வைத்து, அதன் உரிமையாளர்களை தேடும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications