கடலூர் டாஸ்மாக் கடைகளில் தீபாவளி ரெய்டை தடுக்க மாஸ்டர் பிளான் போட்ட மேலாளருக்கு மறக்க முடியாத பரிசு
கடலூர்: தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் ஆர்டிஓ, சார் பதிவாளர் அலுவலகங்களிலும், பல அரசு அலுவலகங்களிலும், டாஸ்மாக் கடைகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் கடலூர் மாவட்ட டாஸ்மாக் கடைகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தாமல் இருக்க விரும்பிய டாஸ்மாக் மேலாளர், லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டருக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைதாகி உள்ளார்.
கடலூர் முதுநகரில் இயங்கி வரும் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் மேலாளராக செந்தில்குமார் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடலூர் நகரைச் சேர்ந்தவர் ஆவார். பொதுவாகவே ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை நெருங்கும் சமயத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார், ஆர்டிஓ அலுவலகங்கள், சார் பதிவாளர் அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகம் மற்றும் பணம் அதிகம் புழங்கும் அரசு அலுவலகங்கள் மற்றும் டாஸ்மாக் கடைகளை குறிவைத்து சோதனை நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு முழுவதும் சார் பதிவாளர் அலுவலங்களில் லஞ்ச ஒழிப்பு தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். அதேபோல் டாஸ்மாக் கடைகளிலும் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சூழலில் கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் செந்தில்குமார், கடந்த சில நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் திருவேங்கடத்தை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அவர் தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் கடைகள் மற்றும் டாஸ்மாக் தொடர்பான அலுவலகங்களில் சோதனை நடத்தாமல் இருக்க தான் லஞ்சமாக ரூ.25 ஆயிரம் தருவதாகவும், பணத்தை பெற்றுக் கொண்டு சோதனை நடத்தாமல் பார்த்துக் கொள்ளும்படி தெரிவித்தாராம். இதுபற்றி இன்ஸ்பெக்டர் திருவேங்கடம், லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி (பொறுப்பு) சத்தியராஜிடம் தெரிவித்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், டாஸ்மாக் மேலாளரை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தார்கள். அதன்படி டாஸ்மாக் மேலாளர் செந்தில்குமார், அலுவலக இளநிலை உதவியாளர் ராதாகிருஷ்ணன் என்பவர் மூலம் ரூ.25 ஆயிரத்தை, இன்ஸ்பெக்டர் திருவேங்கடத்திடம் கொடுத்தனுப்பினாராம். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், இருவரையும் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். செந்தில்குமார், ராதாகிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications