எங்கும் வட இந்தியர்.. பொங்கும் கே.எஸ்.அழகிரி! “மோடி மட்டும் அப்டி பேசலாமா? போராட்டம் நடத்தப்போறோம்”
கடலூர்: நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் வேலைவாய்ப்பில் வட மாநிலத்தவருக்கே முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் நல்லாத்தூர் பகுதியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் இல்ல சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தில் உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என்பது தமிழக காங்கிரஸ் கமிட்டியின் நிலைபாடாகும்.
மாணவியின் மரணத்தில் உண்மை நிலையை அரசாங்கம் உடனடியாக தெரிவிக்க வேண்டும். மாணவி மரணம் தொடர்பாக வதந்திகள் பரப்புவதை அரசு தடுக்க வேண்டும். தமிழ்நாடு காவல்துறை ஒரு புகழ்பெற்ற காவல் துறை. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காவல்துறை அடைந்திருக்கும் தோல்வி ஒரு இமாலய தோல்வி. பள்ளி மாணவி விவகாரத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்து உள்ளனர்.

காவல்துறை தோல்வி
தமிழக முதல்வர் எவ்வளவோ சிறப்பாக செயல்படும் கூட மாவட்ட நிர்வாகத்தில் இருப்பவர்கள் திறமையற்றவர்களாக இருக்கும்போது இதுபோன்ற இடையூறுகள் ஏற்படும். பள்ளி மாணவியின் மரணத்தில் உள்ள உண்மைத்தன்மை என்ன என்பதை அரசு தான் தெளிவுபடுத்த வேண்டும். பள்ளி மாணவி விவகாரத்தில் தமிழக அரசுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்பதை உறுதியாக நம்புகிறோம். பள்ளி மாணவியின் மரணம் கொலையாக இருந்தால் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். தற்கொலையாக இருந்தால் குழந்தைகளின் மனநிலையை ஆராய தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மன ஆலோசகரை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வதந்தியும் கட்டப்பஞ்சாயத்தும்
கலவரத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை அரசாங்கம் கண்டறிந்து அவர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். ஏனென்றால் இது சமூகத்தில் ஒரு நோயாக பரவி வருகிறது. பள்ளி மாணவி மரணம் போன்று ஏதேனும் நிகழ்வுகள் நடைபெறும் போது ஏதேனும் வதந்திகளை பரப்புவதும் அதன் மூலம் கட்டப்பஞ்சாயத்து செய்து பெரும் தொகையை ஈட்டுவது முடிந்தால் இது போன்று பொருட்களை திருடிக் கொண்டு ஓடுவது என்பது தமிழ் சமுதாயத்தின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல்.

பிரதமர் பேச்சுக்கு கண்டனம்
கடந்த முறை பிரதமர் வருகையின் போது மாநில கோரிக்கைகள் குறித்து முதல்வர் பேசியது தவறு என கூறிய பாஜகவினர் தற்போது செஸ் ஒலியம்யாட் போட்டியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளப்படாத சட்டமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத புதிய கல்வி கொள்கையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என கூறுவது மட்டும் எந்த வகையில் நியாயம்.

வட மாநிலத் தொழிலாளர்கள்
பிரதமரின் பேச்சை தமிழக காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டிக்கிறது. நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பின் வடமாநிலத்திற்கே வேலை வாய்ப்பில் முக்கியத்துவம் அளித்து வருகிறது. குறிப்பாக சமீபத்தில் 299 பொறியாளர்கள் நியமனத்தில் ஒருவர் கூட தமிழர் இல்லை என்பதை தமிழக காங்கிரஸ் கடுமையாக கண்டிக்கிறது. இது சம்மந்தமாக காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறவுள்ளது." என்றார்.












Click it and Unblock the Notifications