மக்களுக்கு துரோகம் செய்யும் என்.எல்.சி - தமிழகத்திற்கு தேவையில்லை- அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
கடலூர்: கடலூர் மாவட்டத்தை பாலைவனமாக ஆக்கி வரும் என்.எல்.சி. நிறுவனம், நிலம் கொடுத்த மண்ணின் மைந்தர்களுக்கு துரோகம் செய்து வருவதாக பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். என்.எல்.சி நிறுவனம் தமிழகத்திற்கு தேவை இல்லை என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தையும், கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் சீரழிக்கும் என்.எல்.சி நிறுவனம், தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி, நெய்வேலி ஆர்ச் கேட் அருகில், இன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார்.

என்.எல்.சி-க்கு எதிராக பா.ம.க ஆர்ப்பாட்டம்
அதன்படி. என்.எல்.சி. நிறுவனத்தைக் கண்டித்தும், தமிழக மக்களுக்கு துரோகம் செய்யும் என்.எல்.சி. நிறுவனம் உடனடியாக தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தி, நெய்வேலி ஆர்ச் கேட் அருகில், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியைச் சேந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

66 ஆண்டுகளாக ஏமாற்றும் என்.எல்.சி.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் 66 ஆண்டு காலமாக இந்த மண்ணையும், மக்களையும் ஏமாற்றி பழுப்பு நிலக்கரியை எடுத்து நிலத்தடி நீரை உறிஞ்சி கடலில் அனுப்பி, கடலூர் மாவட்டத்தை பாலைவனமாக என்.எல்.சி நிறுவனம் மாற்றிக் கொண்டிருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன்பு 8 அடி இருந்த நிலத்தடி நீர், தற்போது ஆயிரம் அடிக்கு கீழே சென்றுள்ளது. அதற்கு முழு காரணம் என்.எல்.சி. நிறுவனம்தான்.

என்.எல்.சி நிறுவனம் தேவை இல்லை
ராட்சத பம்புகளை வைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி, கடலுக்கு அனுப்பும் தீய செயலில் ஈடுபட்டு வருகிறது. 66 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கொடுத்த மக்களுக்கு என்.எல்.சி நிறுவனத்தில் வேலை இல்லை. அவர்களுக்கு வாழ்வாதாரம் இல்லை. இன்னும் கூடுதலாக 27 ஆயிரம் ஏக்கர் நிலங்களை எடுக்க வேண்டும் என்று, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து என்.எல்.சி. நிறுவனம் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம்
என்.எல்.சி. நிறுவனத்தில், தமிழக அரக்கு 4 சதவீதம் பங்கு உள்ளது. இப்படி இருந்தும் கடலூர் மாவட்ட மக்களின் உரிமைகளை காக்கத் தமிழக அரசு தவறி விட்டது. இதற்காக தமிழக அரசை கண்டிக்கிறோம். என்.எல்.சி. நிறுவனத்தில் அண்மையில் 299 பொறியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதில் ஒருவர் கூட தமிழர் கிடையாது. 37 ஆயிரம் ஏக்கர் நிலம் கொடுத்தவர்களுக்கே இன்னும் என்.எல்.சி நிறுவனம் சரியா வேலை வழங்கவில்லை.

தமிழகத்திற்கு என்.எல்.சி தேவை இல்லை
மக்களுக்கு தொடர்ந்து துரோகம் விளைவிக்கும் என்.எல்.சி நிறுவனம் தமிழகத்திற்கு தேவை இல்லை. என்.எல்.சி நிறுவனத்தை மூட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. என்.எல்.சி நிறுவனத்துக்கு பூட்டு போடுவோம். இது வெறும் அடையாள போராட்டம்தான். இனி மக்களை திரட்டி மிகப் பெரிய போராட்டம் நடத்துவோம். அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் என்.எல்.சி நிறுனத்திற்கு எதிராக செயல்படுவோம். இனி யாரும் ஏமாற மாட்டோம் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications