ஆக்சிஜன் வசதியுடன் 1,000 படுக்கைகள்:என்எல்சியிடம் பண்ருட்டி வேல்முருகன் தலைமையிலான குழு வலியுறுத்தல்
நெய்வேலி: நெய்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட 1,000 படுக்கைகளுடனான கொரோனா சிகிச்சை மையங்களை என்.எல்.சி. நிறுவனம் அமைக்க வேண்டும் என்று அதன் தலைவர் ராகேஷ் குமாரிடம் அப்பகுதியை சேர்ந்த அமைச்சர் கணேசன், பண்ருட்டி எம்.எல்.ஏ. வேல்முருகன், நெய்வேலி எம்.எல்.ஏ. சபாராஜேந்திரன் ஆகியோர் நேரில் வலியுறுத்தினர்.
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனமானது அப்பகுதி தமிழர்கள் தாரைவார்த்து கொடுத்த நிலத்தில்தான் பிரமாண்டமாக வளர்ந்து ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டுகிறது. ஆனால் என்.எல்.சி. நிறுவனமானது நிலம் தந்த மக்களை இன்னமும் ஒப்பந்த தொழிலாளர்களாகவே வைத்திருக்கிறது.
என்.எல்.சி. நிறுவனத்துக்கு வட இந்தியர்களே தலைவர்களாக நியமிக்கப்படுவதால் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அங்கு வேலை கிடைப்பது குதிரை கொம்பாகிவிட்டது. இதற்கு எதிராக பண்ருட்டி வேல்முருகன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பல ஆண்டுகாலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ரெம்டெசிவர், ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கினால் குண்டாஸ் பாயும்- முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
என்.எல்.சி.யிடம் கோரிக்கை
இந்த நிலையில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், பண்ருட்டி தி. வேல்முருகன் மற்றும் நெய்வேலி எம்.எல்.ஏ. சபா.ராஜேந்திரன் ஆகியோர் என்.எல்.சி. தலைவர் ராகேஷ் குமாரை சந்தித்து 2 மணிநேரம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது நெய்வேலி சுற்றுவட்டார மக்கள் மேம்பாட்டுக்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் CSR Fund-ஐ முழுமையாக கொரோனா பேரிடர் காலத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்கிற யோசனை முன்வைக்கப்பட்டது.
கொரோனா சிகிச்சை மையங்கள்
பொதுவாக இந்த CSR Fund என்பது நெய்வேலி சுற்றுவட்டார மக்களுக்கு ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளை இதுவரை செய்தது இல்லை. எப்போதாவது ஓடைகளை தூர்வாருவதல் போன்ற சில பணிகளை மட்டும் செய்வது உண்டு என்றே கூறப்படுகிறது. சட்ட ரீதியாக ஒதுக்கப்படும் இந்த CSR Fund முறையாக செலவழிக்கபடுவதும் இல்லை என்பது நீண்டகால புகார். அதனால் இந்த CSR Fund-ஐ இம்முறை கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஆக்சிஜனுடன் 1,000 படுக்கைகள்
இது தொடர்பாக பண்ருட்டி வேல்முருகன் எம்.எல்.ஏ. வேல்முருகன் கூறுகையில், எங்கள் சார்பாக இந்த கொரேனா பேரிடர் காலத்தில் இதை கட்டுப்படுத்துவதற்கான மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியில் என்எல்சி நிறுவனத்தின் பங்களிப்பு குறித்தும், என்எல்சி நிறுவனத்தின் சுற்று வட்டார மேம்பாட்டு நிதியை (CSR Fund) கொரோனா பேரிடர் மீட்புக்காக முழுமையாக செலவிடுவது குறித்தும்,என்எல்சி நிறுவனம் சார்பாக ஆக்சிஜன் வசதியை உள்ளடக்கிய ஆயிரம் படுக்கையுடன் மருத்துவமனையை உடனடியாக நிறுவ வேண்டும் என்று வலியுறுத்தினோம், மேலும் 50 மருத்துவர்கள் மற்றும் 50 செவிலியர்கள் உடனடியா பணியமர்த்தவும் வலியுறுத்தியதோடு வென்டிலேட்டர் மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்களை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது என்றார்.
நெய்வேலி சுற்றுவட்டாரங்களில்..
அத்துடன் இந்த 1,000 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையத்தை நெய்வேலியில் மட்டுமே அமைக்காமல் நெய்வேலி சுற்றுவட்டார நகரப் பகுதிகளில் பல இடங்களில் பரந்துபட்ட அளவில் அமைக்க வேண்டும். அப்போதுதான் கிராம மக்கள் ஒரே இடங்களில் குவியாமல், குக்கிராம மக்களுக்கும் முறையான கொரோனா சிகிச்சை கிடைக்கும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. இதனை செயல்படுத்துவதாக என்.எல்.சி. நிர்வாகம் உறுதியளித்திருக்கிறது. இது தொடர்பாக இன்று பண்ருட்டி எம்.எல்.ஏ. வேல்முருகனை என்.எல்.சி. அதிகாரிகள் அவரது வீட்டுக்கு சென்று ஆலோசனையும் நடத்தி உள்ளனர்.