கனமழையால் பள்ளி - கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்
கடலூர்: கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்தில் விழுப்புரம், திருவள்ளூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழக தேர்வுகள், வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் தற்போது பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதற்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தான் முக்கிய காரணமாகும்.

பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனையொட்டிய, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், கடந்த 23 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறி உள்ளது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை வானிலை மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் உறுதி செய்துள்ளார். வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுபெற வாய்ப்புள்ளது என்று அவர் கணித்து கூறியுள்ளார்.
இந்த புயலுக்கு ஃபெங்கல் என பெயரிடப்படுகிறது. இந்த புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் அதி கனமழைக்கான ‛ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் கனமழை எச்சரிக்கையால் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் விபரம் வருமாறு:
கடலூர்: கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதி கனமழை பெய்யலாம் என்பதால் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில் குமார் வெளியிட்டுள்ளார்.
மயிலாடுதுறை: அதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாணவர்களின் பாதுகாப்பை கருதி நாளை விடுமுறை அறிவித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நாகப்பட்டினம்: கனமழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.
சென்னை: கனமழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
செங்கல்பட்டு: கனமழை அறிவிப்பையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர்: கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதி கனமழை பெய்யலாம் என்பதால் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்: நாளை விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்: மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அண்ணாமலை பல்கலைக்கழகம் : கடலூர் சிதம்பரம் அண்ணமலை பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான மாற்றுத்தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
நேர்முகத்தேர்வு ஒத்திவைப்பு: அதேபோல் கடலூர் அரசு கலை கல்லூரியில் நாளை நடைபெற இருந்த கூட்டுற சங்க விற்பனையாளர் பணிக்கான நேர்முகத்தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு டிசம்பர் 6ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை கூட்டுறவு சங்க விற்பனையாளர் பணிக்கான நேர்முகத்தேர்வு நடைபெற இருந்தது. இந்த தேர்வு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த தேர்வு டிசம்பர் 4ம் தேதி நடக்கும் என்று கூட்டுறவு சங்க இணை பதிவாளர் தயாள விநாயகன் தெரிவித்துள்ளார்.
திருச்சி பல்கலைக்கழகம்: கனமழை காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வு நெறியாளர் ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி - காரைக்கால்: அதேபோல் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக இந்த அறிவிப்பை புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications