கடலூரில் 3 பேரை கொன்று எரித்த கொலையாளி கைது.. "என் அம்மா சாவுக்கு காரணம்”.. பகீர் வாக்குமூலம்!
கடலூர்: கடலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவத்தில், திடீர் திருப்பமாக அதே ஏரியாவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையாளியின் வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த காராமணி குப்பத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் ஓய்வு பெற்ற மருந்தாளுநர். நெல்லிக்குப்பத்தில் ஒரு சர்க்கரை ஆலை மருத்துவமனையில் கம்பவுண்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மறைந்ததாக கூறப்படுகிறது. இவரது மனைவி கமலேஸ்வரி. மகன்கள் சுரேந்திரகுமார், சுமந்த் குமார்.

கடலூர் கொலை சம்பவம்: இதில் சுரேந்திரகுமார் ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவில் வசித்து வருகிறார். மற்றொரு மகன் சுமந்த் குமார் ஹைதராபாத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அவரது மகன் இஷாந்த், தனது பாட்டியுடன் வசித்து, கடலூரில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமந்த்குமார் காராமணிக்குப்பம் வந்து தங்கி இருந்த நிலையில் தான் ஜூலை 15ஆம் தேதியன்று சுரேஷ்குமாரின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி வந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
கருகிய நிலையில் உடல்கள்: இதையடுத்து அங்கு வந்து போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுமந்த் குமார், அவரது மகன் மற்றும் தாய் கமலேஸ்வரி ஆகிய 3 பேரும் ஒவ்வொரு அறையில் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், வீடு முழுவதும் ரத்தக்கறையும் பரவிக் கிடந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூவரும் எரித்துக் கொல்லப்பட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்டவர்கள் வீட்டு டிரைவர், பால் கொடுப்பவர், வீட்டு வேலை செய்யும் பெண் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
பக்கத்து வீட்டில்?: எனினும், போலீசாருக்கு எந்தவொரு பிடியும் கிடைக்கவில்லை. கொலை செய்யப்பட்ட இடத்தில் எந்த தடயமும் சிக்கவில்லை. வீட்டில் இருந்த 3 செல்போன்களையும் கைப்பற்றி ஆராய்ந்த போது அதில் இருந்த சிம் கார்டுகளை அகற்றியதோடு, அவற்றை யாரோ ஃபார்மேட் செய்து அதில் இருந்த தகவல்களை அழித்துவிட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உதவியுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சம்பவ இடத்திற்கு அருகில் வசித்து வரும் சண்முகவேல் என்பவரின் வீட்டுச் சுவரில் ரத்தக்கறை இருந்ததால் அவரிடம் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர். ரத்த மாதிரிகளையும் சோதனைக்கு அனுப்பி இருந்தனர்.
திடீர் திருப்பம்: இந்நிலையில் திடீர் திருப்பமாக அதே பகுதியில் வசித்து வரும் சங்கர் ஆனந்த், சாகுல் ஹமீது ஆகிய இருவரும் இந்த கொலையை செய்திருப்பதாக இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கொலை செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டதாக போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களிடம் இருந்து கமலேஸ்வரியின் சில நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சங்கர் ஆனந்தின் தாயார் கடந்த ஜனவரி மாதம் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும், அதற்கு காரணம் சுமந்த்குமார் தான் எனவும், இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த தன்னை, கமலேஸ்வரி அனாதை என திட்டியதால் ஆத்திரத்தில் நள்ளிரவில் வீடு புகுந்து வீட்டில் இருந்த 3 பேரையும் வெட்டிக் கொலை செய்ததாக சங்கர் ஆனந்த் வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொலையாளி அதிர்ச்சி வாக்குமூலம்: தனது தாயின் தற்கொலைக்கு காரணமான சுமந்த்குமாரை மட்டுமே கொல்லச் சென்றதாகவும், அவரது அம்மா கமலேஸ்வரி தன்னை தடுக்க முயன்றதால் இருவரையும் கொலை செய்தேன் என்றும் சங்கர் ஆனந்த் கூறியுள்ளார். சிறுவனை வெளியில் விட்டால் நடந்த விஷயங்களை சொல்லிடுவான் என்பதால் அவனது முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார் சங்கர் ஆனந்த்.
அதிகாலை வரை அந்த வீட்டிலேயே இருந்துவிட்டு அங்கிருந்து கிளம்பியதாகவும், அடுத்த நாள், நண்பனுடன் சென்று பெட்ரோல் ஆசிட் ஊற்றி மூன்று பேரையும் எரித்ததாகவும் கூறியுள்ளார் சங்கர் ஆனந்த் . பின்னர் பீரோவில் இருந்த பணம் நகைகளை எடுத்துக் கொண்டு வீட்டை பூட்டிவிட்டு தப்பித்ததாகவும் தெரிவித்துள்ளார். சங்கர் ஆனந்த்தின் நண்பன் சாகுல் ஹமீது என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications