கள்ளநோட்டு கனெக்சன்.. ஒரு மாசம் டிமிக்கி கொடுத்த விசிக செல்வம்! பொறி வைத்து பிடித்த போலீஸ்! எப்படி?
கடலூர்: கடலூரில் கள்ள நோட்டு புழக்கம் இருப்பதாக காவல்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட சோதனையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளருக்கு சொந்தமான இடத்தில் கள்ள நோட்டு கும்பல் கைது செய்யப்பட்டது. இந்த நிலையில் கள்ள நோட்டு விவகாரத்தில் தலைமறைவாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் சுமார் ஒரு மாதத்திற்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் ராமநத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திட்டக்குடி அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவன் மகன் செல்வம் (வயது- 39) என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளராக செயல்பட்டு வருகிறார்.
இவருக்கு சொந்தமான வயலில் தகர சீட் கொட்டாய் அமைத்து அதில் கள்ள நோட்டு அடிக்கும் இயந்திரங்களை வைத்து கள்ள நோட்டு அடித்து புழக்கத்தில் விட்டு வருவதாக ராமநத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் காலை அவரது வயலில் உள்ள தகர சீட் கொட்டகைக்கு சென்ற போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது விசிக பிரமுகர் செல்வம் அங்கிருந்து தப்பி ஓடினார். தொடர்ந்து போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது கள்ள நோட்டு அச்சடித்தது புழக்கத்தில் விட்டது தெரிய வந்தது. தொடர்ந்து கள்ளநோட்டு அச்சடிக்கும் இயந்திரம், வாக்கி டாக்கிகள், அச்சடிக்கும் பேப்பர், ரூ. 83,000 - ரொக்க பணம், வாக்கி டாக்கி - 1, லேப்டாப் - 1, ஏர்கன் - 1, பிஸ்டல் ஏர்கன் - 1, கவுண்டிங் மெஷின் - 1, பிரிண்டிங் மெஷின் - 1, பேப்பர் பண்டல் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.
தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விவசாய நிலத்தில் ஷெட் அமைத்து கள்ள நோட்டுகள் அச்சடித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் செல்வம் உள்ளிட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கள்ள நோட்டு அச்சடிக்கும் விவகாரத்தில் சிக்கிய செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.
இது ஒரு புறம் இருக்க கள்ளநோட்டு கும்பலை கைது செய்ய கடலூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். தமிழ்நாடு முழுவதும் விசாரணை நடைபெற்ற நிலையில் செல்வம் எங்கிருக்கிறார் என கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஒட்டுமொத்தமாக கள்ள நோட்டு கும்பல் தலைமறைவான நிலையில் வழக்கை முடிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.
இந்த நிலையில் செல்வத்தின் உறவினர் ஒருவரின் செல்போனை ரகசியமாக கண்காணித்த போது அவருடன் கர்நாடகாவில் உள்ள நபர் பேசி வருவது தெரிய வந்தது. இதனையடுத்து விசாரணையை துரிதப்படுத்திய போலீசார் அது செல்வம் தான் என்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து கர்நாடகா விரைந்த தமிழ்நாடு போலீசார் அங்கு பதுங்கி இருந்த செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகள் ஐந்து பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கள்ள நோட்டு விவகாரத்தில் ஒரு மாதத்திற்கு மேலாக தலைமறைவாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்கின்றனர் போலீசார்.
இந்த நிலையில் கள்ள நோட்டு கும்பலுடன் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் உள்ள கள்ள நோட்டு கும்பலுடன் செல்வத்துக்கு தொடர்பு இருக்கிறதா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications