ஃபேன் இல்லாமல் வியர்க்குது சார்! விளையாட்டாக சொன்ன மாணவர்கள்! சொந்தப்பணத்தில் வேல்முருகன் சர்ப்ரைஸ்!
கடலூர்: தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தனது சொந்தப் பணத்திலிருந்து அரசுப்பள்ளிகளுக்கு மின் விசிறிகள் மற்றும் மின் விளக்குகள் உள்ளிட்ட சாதனங்களை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
2 நாட்களுக்கு முன்னர் இவர் ஆய்வுக்கு சென்ற போது, ''ஃபேன் இல்லாமல் வியர்க்குது சார்'' எனக்கூறிய மாணவர்களின் கோரிக்கையை, சீரியஸாக எடுத்துக் கொண்டு உடனடியாக ஃபேன் வாங்கிக் கொடுத்து அதை வகுப்பறைகளில் பொருத்தி சர்ப்ரைஸ் அளித்திருக்கிறார்.
சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இது போன்ற சாதனங்களை கொள்முதல் செய்ய வழிவகை இல்லை என்பதால் சொந்தப் பணத்தை செலவழித்திருக்கிறார் வேல்முருகன்.

பண்ருட்டி தொகுதி
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருமான வேல்முருகன், ஊரில் இருக்கின்ற போதெல்லாம் ஆய்வுகளை அதிகமாக நடத்தக்கூடியவர். குறிப்பாக அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், ரேஷன் கடைகளுக்கு ஆய்வுக்கு செல்வதை தனது தொடர்ச்சியான பணிகளில் ஒன்றாக வைத்திருக்கிறார். அந்த வகையில் திருவதிகையில் இயங்கி வரும் பண்ருட்டி நகராட்சி உயர்நிலைப்பள்ளிக்கு 2 நாட்களுக்கு முன்னர் ஆய்வு சென்ற வேல்முருகன் அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

மின் விசிறி இல்லை
அதே போல் மேல்பட்டாம்பாக்கத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய பெண்கள் நடுநிலைப் பள்ளியிலும் ஆய்வு நடத்திய வேல்முருகன், வகுப்பறைகளில் மின் விசிறிகள் இல்லாத நிலையையும், மின்விளக்குகள் பழுதடைந்த நிலையில் இருப்பதையும் கண்டறிந்திருக்கிறார். இதனிடையே ''ஃபேன் இல்லாமல் வியர்க்குது சார்'' என தங்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் விளையாட்டாய் மாணவர்கள் கூறியிருக்கின்றனர்.

சொந்தப் பணம்
இதனை உடனடியாக கவனத்தில் கொண்ட வேல்முருகன் தனது சொந்தப் பணத்தில் அரசு பள்ளிகளுக்கு தேவையான மின் விசிறிகளையும் மின் விளக்குகளையும் வாங்கி அதை தனது கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம் வழங்கி அரசுப் பள்ளிகளில் பொருத்துவதற்கு ஏற்பாடு செய்தார். சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இது போன்ற சாதனங்களை கொள்முதல் செய்ய வழிவகை இல்லை என்பதால் சொந்தப் பணத்தை வேல்முருகன் செலவழித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் -ஆசிரியர்கள்
கோடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் வகுப்பறைகளில் மின் விசிறிகள் சுழலத் தொடங்கியதால், மேல்பட்டாம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய பெண்கள் நடுநிலைப் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications