அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மீதான அதிருப்தி! அதிரடி காட்டத் தயாராகும் வேல்முருகன்!
கடலூர்: திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், இனி வரும் நாட்களில் சில அதிரடிகளை காட்டத் தயாராகிவிட்டாராம்.
உள்ளூர் அரசியல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தன்னை மீறி வேல்முருகனை செயல்பட விடாமல் தடுப்பதே அவரது இந்த கோபத்துக்கு காரணமாம்.
இதனால் தான் இனியும் தன்னால் பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது என சீற ஆரம்பித்திருக்கிறார் வேல்முருகன்.

கடலூர் மாவட்டம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் வேல்முருகன். இவர் திமுக கூட்டணியில் அங்கம் வகித்தாலும் கூட கடலூர் மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை மீறி அவரால் தனித்து எதுவும் செய்ய முடியவில்லையாம். தனது தொகுதி வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக கூட அமைச்சரின் உத்தரவை எதிர்பார்த்து அதிகாரிகள் காத்திருப்பதை வேல்முருகனால் ஜீரணிக்கவே முடியவில்லையாம்.

வேல்முருகன்
இதனால் தான் அண்மை நாட்களாக அரசு மீதான கடுகடுப்பை காட்டத் தொடங்கியிருக்கிறார். ஏற்கனவே அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தால் கடலூர் எம்.எல்.ஏ. அய்யப்பன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு பிறகு அவர் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் கசிந்த நிலையில் மீண்டும் இணைக்கப்பட்டார். இந்நிலையில் அடுத்ததாக கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் கோபித்துக் கொண்டுள்ளார்.

சுய மரியாதை
வேல்முருகனை பொறுத்தவரை எது கிடைக்கிறதோ இல்லையோ சுய மரியாதையை ஒரு போதும் இழக்க விரும்பாதவர். இதனால் தான் ஆளுங்கட்சி அரசாங்கத்தில் பவர்புல் மந்திரியாக திகழும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துடன் சமரசனின்றி அரசியல் செய்து வருகிறார் வேல்முருகன். கடலூர் மாவட்டம் என்றில்லை பல மாவட்டங்களில் மந்திரிகளால் இதே பஞ்சாயத்து திமுக தலைமையை எட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின் நன் மதிப்பு
வேல்முருகன் மீது முதலமைச்சர் ஸ்டாலின் மிகுந்த நன் மதிப்பு வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. உடல்நலம் சீரான பிறகு அவரே இதில் தலையிட்டு வேல்முருகனை அழைத்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. லோக்கல் பாலிடிக்ஸ் காரணமாக அமைச்சர்கள் ஓரிருவர் செய்யும் அரசியலால் அது தலைமைக்கு தான் தர்ம சங்கடமான சூழலை ஏற்படுத்தி தருகிறது.












Click it and Unblock the Notifications