"பெண்களை ஆபாசமா பேசுவியா? கால்ல விழுடா?" இரு இளைஞர்களை புரட்டி எடுத்த பெண்கள்! நடந்தது என்ன?
கடலூர்: கடலூர் அருகே பைக்கில் சென்றபோது அருகே வந்து ஆபாசமாக பேசியதாக இரு இளைஞர்களை தைரியமாக மடக்கி பிடித்த இரு பெண்கள் அவர்களை சரமாரியாக அடித்து வெளுத்த காட்சி வைரலாகி வருகிறது.
இதுகுறித்து அந்த பெண்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இன்று என் அப்பாவின் ரீயூனியன் விழா ஒன்று இருந்தது. அதற்கு போய்விட்டு நான் பைக்கில் வந்து கொண்டிருந்தேன். அப்போது இன்னொரு பைக்கில் இரு இளைஞர்கள் வந்துக் கொண்டிருந்தனர்.

அவர்கள் இருவரும் எங்கள் பைக் அருகே வந்து கொச்சையான வார்த்தைகளை பேசினர். காது கொடுத்து கேட்க முடியவில்லை. நானும் கண்டுக் கொள்ளாமல் போகலாம் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் அவர்கள் மேலும் மேலும் எங்களை ஆபாசமாக பேசினார்கள். "நான் என்னப்பா பேசின.." என கேட்டதற்கு நக்கலாக சிரித்தார்கள். இதனால் நாங்கள் அந்த பைக்கை பின்தொடர்ந்தோம். நாங்கள் பின்னால் வருவதை பார்த்துவிட்டு மீண்டும் யூடர்ன் எடுத்தனர்.
அவர்களை எப்படியும் பிடித்துவிட வேண்டும் என நினைத்தோம். எங்களை பார்த்ததும் வேகமாக செல்ல முயன்றதால் அவர்கள் ஒரு தெரு முனையில் வாகனத்தை திருப்பிய போது கீழே விழுந்துவிட்டார்கள். உடனே இறங்கி போய் அவர்களை அடித்தேன்.
நான் எனக்காக அடிக்கவில்லை. என்னை பேசிவிட்டு சென்றதும் நாளை இன்னொரு பெண்ணை இப்படி பேசக் கூடாது என்பதற்காக அவர்களை அடித்தேன். நாங்கள் அடிப்பதை பார்த்து சிலர் வந்து எங்களுக்கு ஆதரவாக பேசினார்கள், சிலர் "ஏம்மா ஆம்பள புள்ளைங்கள போட்டு அடிக்கிறீங்க"ன்னு கேட்டாங்க.
நாங்கள் அடித்த போதும் அசிங்கமாக பேசினார்கள். வீடியோ எடுத்ததும் எடுக்க வேண்டாம் என்றார்கள். உடனே எங்களிடம் இருந்து தப்பினர். அவர்கள் விட்டுச் சென்ற இரு சக்கர வாகனத்தை போலீஸில் ஒப்படைத்துவிட்டோம். அந்த இளைஞர்கள் மீது புகாரும் கொடுத்துவிட்டோம்.
நிச்சயம் அவர்கள் மீது ஆக்ஷன் எடுப்பார்கள் என நம்புகிறோம். நான் எல்லா பெண்களுக்கும் சொல்வது ஒன்றுதான், எல்லாரும் தைரியமாக இருங்கள், பயப்படாதீர்கள். என்ன பிரச்சனை வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என தான் நாங்கள் அவர்களை அடித்தோம் என்றனர்.
அந்த வீடியோவில் ஒரு பெண் வீடியோ எடுக்கிறார், இன்னொரு பெண் அந்த இளைஞர்களை தாக்கினார். அப்போது "ஒரு பெண்ணை பேசுவியா, காலில் விழுடா, உனக்கு என்ன வயசு, எங்களை பார்த்து அப்படி ஒரு வார்த்தை சொல்ற" என அந்த இளைஞர்களை இருவரும் புரட்டி எடுத்தனர்.
இந்த பெண்களின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து ப்ளூசட்டை மாறன் கூறியிருப்பதாவது: ஆபாச செய்கை காட்டுவது, ஓரிரு வார்த்தைகளில் கிண்டல் செய்வது போன்றவற்றை பொறுத்துக் கொண்டு போவதால்தான்.. அது பாலியல் சீண்டல், வன்கொடுமை வரை நீள்கிறது.
பொறுக்கிகளுக்கு தக்க பாடம் புகட்டிய இவர்களை போல.. அனைத்து பெண்களும் துணிவுடன் இருக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications