இடுப்பளவு வெள்ள தண்ணீரில் தலையில் பால் பாக்கெட்டுகளை சுமந்த விருத்தாசலம் தாசில்தார்.. வைரல் போட்டோ
விருத்தாசலம்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பதற்காக பால் பாக்கெட்டுகளை விருத்தாசலம் தாசில்தார் தலையில் சுமந்து சென்ற காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புரேவி புயலால் தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்தது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக தர்மநல்லூர், ஆலிச்சிக்குடி, கார்குடல், கம்மாபுரம், கருவேப்பிலங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.

அவதி
இதனால் அப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த குடும்பத்தினர் அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சாத்துக்கூடல் உச்சிமேடு கிராமத்தையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் கிராமத்திற்கு உள்ளேயும் வெளியேயும் செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.

அடிப்படை வசதிகள்
உணவு மற்றும் அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் தவித்து வரும் அப்பகுதி மக்களுக்கு வருவாய்த் துறையினர் உதவி வருகிறார்கள். இடுப்பளவு தண்ணீரில் சென்று அந்த மக்களுக்கு உணவு, பிஸ்கெட் பாக்கெட்டுகள் உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறார்கள்.

இடுப்பளவு தண்ணீர்
மேலும் விருத்தாசலம் வட்டாட்சியர் சிவக்குமார் இடுப்பளவு வெள்ளத்தில் தலையில் பால் பாக்கெட்டுகளை சுமந்தபடி சாத்துக் கூடல் உச்சிமேடு கிராமத்திற்கு கொண்டு சென்றார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெள்ளம் பாதித்த இடங்களுக்கு அதிகாரிகள் வருகை என்பதே அதிசயம்தான்.

பால் பால்கெட்
அதிலும் ஒரு வட்டாட்சியர் பால் பாக்கெட்டுகளை தலையில் சுமந்து சென்று மக்களுக்கு விநியோகிக்கும் காட்சிகள் காண்போரை நெகிழ செய்கிறது. இதனால் இந்த வட்டாட்சியருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளார்கள்.












Click it and Unblock the Notifications