வந்ததுதான் வந்தீங்க! சீட்டை தூக்கி எறிஞ்சிருக்க வேண்டாமா? மாமா அன்புமணியை வறுத்த விஷ்ணுபிரசாத்
கடலூர்: அதிமுகவுடன் வைத்த கூட்டணியால் கிடைத்த ராஜ்யசபா எம்பி பதவியை அன்புமணி ராமதாஸ் தூக்கி எறிந்திருக்கலாமே என கடலூர் நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடலூர் நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்குகிறார் எம்.கே. விஷ்ணுபிரசாத். இவர் செய்யாறை சேர்ந்தவர். இவருடைய தங்கை சவுமியாவைத்தான் அன்புமணி ராமதாஸ் திருமணம் செய்துள்ளார்.

விஷ்ணுவின் தந்தை எம்.கிருஷ்ணசாமி, அன்புமணியின் மாமனார், பாமக நிறுவனர் ராமதாஸின் சம்பந்தியாவார். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் விஷ்ணுபிரசாத் பேசுகையில் சங்கடமான சூழல் இந்த அரசியலில் இருக்கிறது. என்னுடைய மாமாவாக அன்புமணி உள்ளார். உறவுகள் வேறு, அரசியல் வேறு என்று கூறியதுடன் மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே போர் நடந்தது.
இதில் தர்மம் வென்றது. பாண்டவர் அணி வென்றது. நாங்கள் பாண்டவர் அணி. பாமகவிற்கு கொள்கைகள் இல்லை. இவர்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தனித்து போட்டியிருந்தாலும் ஏற்றுக் கொண்டிருக்கலாம். மேலும் போராட்டம் என வந்துவிட்டால் எதிரில் நிற்பது மாமனாக இருந்தாலும் மச்சானாக இருந்தாலும் குறி தவறாது.
6 மாதத்திற்கு முன்பு என்எல்சிக்கு எதிராக மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினர். அப்போது இந்த என்எல்சி நிறுவனம் யாருடைய கையில் உள்ளது. அவர்களிடமே தற்போது கூட்டணி வைத்துவிட்டு எப்படி சென்று வாக்கு கேட்பீர்கள், அதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?
மேலும் அதிமுக கூட்டணி மூலம் உங்களுக்கு ராஜ்யசபா எம்பி கிடைத்தது. ஆனால் தற்போது கூட்டணியில் இல்லை என கூறி கூட்டணியில் இருந்து வெளியே வந்ததும் எம்பி பதவியை தூக்கி எறிந்திருக்க வேண்டாமா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அதிமுக கூட்டணியில் பெற்ற எம்எல்ஏ பதவியை, அவர் அந்த கூட்டணியிலிருந்து வெளியே வந்ததும் ராஜினாமா செய்தார். இதுதான் சரியான பாதை. இவ்வாறு விஷ்ணு பிரசாத் கடுமையாக விமர்சித்திருந்தார்.
மேலும் விஷ்ணு பிரசாத் பேசுகையில், "நான் ஒன்றை மட்டும் கூறிக் கொள்கிறேன். நான் கடலூருக்கு அண்ணன் எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்தை நம்பி வந்துவிட்டேன். அவரிடம் நான் சரணாகதி அடைந்துவிட்டேன். இனி அவர் பார்த்து என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யட்டும். படையப்பா படத்தில் வருவது போல் மாப்பிள்ளை நான்தான். ஆனால் நான் போட்டிருக்கிற சட்டை அவருடையது" என பேசி கலகலப்பை ஏற்படுத்தினார்.
அன்புமணி ராமதாஸ் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. பாஜக கூட்டணியில் 10 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது. அதில் ஏற்கெனவே தருமபுரி போட்டியிட்டு எம்பியாக இருந்த தொகுதியிலேயே மனைவி சவுமியாவும் போட்டியிடுகிறார். அவருக்கு அவருடைய மகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications