கடலூரில் அதிகாலையில் டீ குடிக்க காரில் சென்ற மாணவர்கள்... உயிருடன் இல்லை.. உருக்கமான தகவல்
கடலூர்: கடலூர் மாவட்டம், ராமநத்தம் அருகே உள்ள லக்கூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் வேளாண் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் ஆறு மாணவர்கள் கல்லூரி விடுதியில் இருந்து காரில் கிளம்பி உள்ளார்கள். டீ குடிக்க கிளம்பி சென்றுள்ளனர். அவர்களுக்கு அவர்கள் ஓட்டியே காரே எமனாக மாறி உள்ளது. உருக்கமான தகவல்களை பார்ப்போம்.
கடலூர் மாவட்டம், ராமநத்தம் அருகே உள்ள லக்கூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் வேளாண் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கத்தை சேர்ந்த மாதவன் மகன் தரணி செல்வன்(வயது 20), கடலூர் மாவட்டம் சிதம்பரம் கண்ணன் மகன் நிஷாந்த்(20), திருவண்ணாமலை மாவட்டம் ஏழுமலை மகன் விநாயகமூர்த்தி(20), செங்கம் அருகே உள்ள புதுப்பட்டு கிராமம் பிரேம்நாத் மகன் சசிக்குமார்(20) ஆகியோர் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்கள்.

அதே கல்லூரியில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மேல்பாகம் ரமேஷ் மகன் ராஜேஷ்(18), திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கீழ்வாளாடி சிவமுருகன் மகன் மதுப்பிரியன்(19) ஆகியோரும் படிக்கிறார்கள். இந்த 6 பேரும் நேற்று அதிகாலை 2 மணியளவில் கல்லூரி விடுதியில் ரெக்கார்டு நோட்டு எழுதிக்கொண்டிருந்தனர்.
பின்னர் அவர்கள் டீ குடிப்பதற்காக பேராசிரியருக்கு சொந்தமான காரில், கல்லூரியின் பின்பக்க வாசல் வழியாக சென்று ராமநத்தம் பேருந்து நிலையத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது. அங்குள்ள கடை ஒன்றில் டீ குடித்த பின்னர் அவர்கள் மீண்டும் காரில் புறப்பட்டு கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை சசிக்குமார் ஓட்டியிருக்கிறார்.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எழுத்தூர் பகுதியில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் சாலையில் உள்ள தடுப்பு கட்டையை தாண்டி எதிரே பெண் பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று விட்டு பெரம்பலூா் நோக்கி வந்து கொண்டிருந்த சுற்றுலா பேருந்து மீது மோதியது. மோதிய வேகத்தில் அப்பளம்போல் நொறுங்கிய கார் உருக்குலைந்தது.
இந்த விபத்தில் மாணவர்கள் தரணிசெல்வன், நிஷாந்த் மற்றும் விநாயகமூர்த்தி ஆகிய 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த ராஜேஷ், மதுப்பிரியன், சசிக்குமார் ஆகிய மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications