50 மீ.. தரதரவென இழுத்து செல்லப்பட்ட பள்ளி வேன்.. இன்டர்லாக் செய்யாத கேட்! விபத்துக்கு காரணமே இதுதான்
கடலூர்: கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஆச்சாரியா என்ற தனியார் பள்ளிக்கு சொந்தமான அந்த வேன், ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில், வேனில் இருந்த பள்ளிக் குழந்தைகள் மீது மோதியதில் இந்த உயிரிழப்பு நேரிட்டது.
இந்த விபத்தில் ஒரு மாணவி, ஒரு மாணவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், காயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரயில்வே கேட்டை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால், வேன் தண்டவாளத்தை கடந்தபோது விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கேட் கீப்பரின் அலட்சியத்தால் தான் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆத்திரமடைந்த பொதுமக்கள், அவரைத் தாக்கினர்.

ரயில் மோதி பள்ளி வேன் விபத்து
ரயில் மோதிய வேகத்தில் அந்தப் பள்ளி வேன் சுமார் 50 மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டது. விபத்து குறித்து ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், கேட் கீப்பர் கேட்டை மூட முயற்சித்தபோது, தண்டவாளத்தை கடந்து சென்றுவிடுகிறேன் என ஓட்டுநர் வற்புறுத்திச் சென்றதே விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் செம்மங்குப்பம் லெவல் கிராசிங்கில் ரயில்வே கேட்டை உரிய நேரத்தில் மூடாத கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ரயில் வருவது தெரிந்தும் வேன் டிரைவர் கூறியதை கேட்டு ரயில்வே கேட்டை திறந்ததே விபத்திற்கு காரணம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில்வே கேட் இன்டர்லாக் செய்யப்படாத கேட்
தெற்கு ரயில்வே அளித்த விளக்கத்தில், இன்று காலை சுமார் 07.45 மணியளவில் விபத்து நிகழ்ந்துள்ளது. மேலும், கேட் கீப்பர் கேட்டை மூடத் தொடங்கிய போது வேன் ஓட்டுநர் வேனை வேகமாக இயக்கியதால் விபத்து நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட ரயில்வே கேட் இன்டர்லாக் செய்யப்படாத கேட் எனவும், கேட் கீப்பர் முறையாக மேனுவலாக கேட்டை மூட முயற்சித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளில்லாத ரயில்வே கேட் மூடப்படாததால் வேன் உள்ளே நுழைந்ததாக முதலில் மக்கள் குறிப்பிட்ட நிலையில், ரயில்வே இதனை மறுத்துள்ளது.
நேரில் ஆய்வு
கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் தனியார் பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து நடந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்தார் திருச்சி ரயில்வே எஸ்.பி. ராஜன். திருச்சி மற்றும் சென்னை ரயில்வே பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளும், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகனும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்.
கடலூர் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் கடலூர் - மயிலாடுதுறை மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு. ரயில் மோதியதில் வேன் உருக்குலைந்ததால் பலி எண்ணிக்கை உயரும் என அச்சம் ஏற்பட்டு உள்ளது.
கடலூர் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து தமிழ்நாட்டையே உலுக்கி உள்ள நிலையில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்
நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்கள்
கடலூர் அருகே மூடப்படாத ரயில்வே கேட்டை பள்ளி வேன் கடக்க முயன்றபோது ரயில் மோதிய விபத்து காரணமாக முக்கிய ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டு உள்ளது. திருச்சியிலிருந்து தாம்பரம் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், சிதம்பரம் ரயில் நிலையத்தில் அரை மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் செல்லும் பயணிகள் ரயில் ஆலப்பாக்கம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications