கனவில் கூட நடக்க கூடாத சம்பவம்! புதுமண ஜோடி.. பெண் சப் இன்ஸ்பெக்டர்- கணவருக்கு கடலூரில் சோகம்
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சித்தலப்பாடி பகுதியில் அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது கணவர் உயிரிழந்துள்ளனர். திருமணம் ஆன 2 மாதத்தில் கணவன் மனைவி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஜெயங்கொண்டப்பட்டினம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் இளவரசி. காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி காவல் நிலையத்தில் இளவரசி பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இளவரசிக்கு கலைவேந்தன் என்பவரோடு நவம்பர் மாதம திருமணம் ஆனது. கலைவேந்தன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

கலைவேந்தன் இளவரசி ஜோடி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், இன்று சிதம்பரம் வீரன்கோயிதிட்டு கிராமத்தில் நடந்த சுப நிகழ்ச்சிக்கு செல்வதற்காக கலைவேந்தன் இளவரசி ஜோடியினர் ஒன்றாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் சித்தலப்பாடி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலையில் எதிராக சிதம்பரம் நோக்கி வந்துகொண்டிருந்த அரசு பஸ் திடீரென எதிர்பாராதவிதமாக இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில், மோட்டார் சைக்கிளோடு புதுமண ஜோடி இருவரும் சாலையில் இழுத்து செல்லப்பட்டனர்.
இந்த கொடூர விபத்தில் பஸ்க்கு அடியில் சிக்கி கலைவேந்தன் இளவரசி இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து அப்பகுதியில் இருந்தவர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. விபத்து பற்றி அறிந்ததும், அண்ணாமலை நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அரசு பஸ் அடியில் சிக்கியிருந்த இரண்டு பேரின் உடலையும் மீட்டனர்.
தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் ஆன இரண்டு மாதத்தில் கணவன் மனைவி இருவரும் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications