ஏன் என்னை கழட்டி விட்டுட்டே.. பாத்ரூம் கிளீனிங் ஆசிட்டை எடுத்து காதலி மீது வீசிய காதலன்.. பரபரப்பு!
காதலி மீது ஆசிட் வீசிய இளைஞனுக்கு பொதுமக்கள் தர்ம அடி தந்தனர்
Recommended Video
கடலூர்: "ஏன் என்னை கழட்டி விட்டுட்டே" என்று ஆவேசத்துடன் கேள்வி கேட்ட காதலன், பாத்ரூம் கிளீன் செய்யும் ஆசிட்டை எடுத்து காதலியின் முகத்தில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் முத்தமிழன். 24 வயதாகிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிபிஇஎஸ் 2-ம் வருடம் படித்து வருகிறார்.
கதிராமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுசித்ரா என்ற 19 வயது மாணவியும், இதே காலேஜில் 2-ம் வருடம் படித்து வருகிறார். இவர்கள் இருவருமே 6 வருடமாக காதலித்து வருகிறார்கள். இந்நிலையில், முத்தமிழனின் போக்கு பிடிக்காமல் சுசித்திரா அவரை விட்டு மெல்ல விலக தொடங்கி உள்ளதுடன், வேறு ஒருவருடனும் பழகி வந்துள்ளதாக தெரிகிறது.
இந்த விஷயத்தை கேள்விப்பட்டு, மனவேதனை அடைந்த முத்தமிழன் 2 நாளைக்கு முன்னாடி, எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இப்போது மீண்டும் சுசித்ராவிடம் இதை பற்றி நியாயம் கேட்க பல்கலைக் கழக விருந்தினர் மாளிகை அருகே நேற்று சென்றிருக்கிறார்.
"ஏன் என்னிடம் பேசுவதில்லை, எதற்காக என்னை கழட்டிவிட்டுவிட்டாய்" என்று கேட்டதாக தெரிகிறது. அதற்கு சுசித்ரா, செருப்பை எடுத்துக் காட்டி, எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த முத்தமிழன் பாத்ரூம் கிளீன் செய்ய வைத்திருந்த ஆசிட்டை எடுத்து சுசித்ரா மீது வீசியுள்ளார். முகம், கைகளில் ஆசிட் பட்டதால், பலத்த காயமடைந்த சுசித்ரா வலியால் அலறி துடித்தார்.
இதையடுத்து, அங்கிருந்தோர் அண்ணாமலைநகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் முத்தமிழனையும் சரமாரியாகத் தாக்கினர். இதனால் அவரும் பலத்த காயமடையவே, அவரையும் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.இந்த தகவல் அறிந்த அண்ணாமலை நகர் போலீசார் இது சம்பந்தமாக விசாரித்து வருகிறார்கள்.