புதிய புயலால் சென்னை பாதிக்கும்.. புதிய வைரஸ் பரவும்.. பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சியில் தகவல்
ராமேஸ்வரம்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி ராமேஸ்வரம் கோயிலில் வாசிக்கப்பட்ட பஞ்சாகத்தில் சென்னையை புயல் தாக்கும் என்பது குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
ராமேஸ்வரம் கோயிலில் ஆண்டுதோறும் தமிழ்ப்புத்தாண்டு அன்று கோயிலின் சோமாஸ்கர் சன்னதிக்கு முன்பு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.
அதன்படி தமிழ்ப் புத்தாண்டையொட்டி ராமேஸ்வரம் கோயிலில் நேற்று பகல் 12 மணியளவில் கோயிலின் சோமாஸ்கந்தர் சன்னதி முன்பாக பஞ்சாங்கம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அப்போது பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

வாசித்தல்
பஞ்சாங்கத்தை கோயிலின் சர்வசாதகம் சிவமணி வாசித்தார். அவர் வாசித்ததில் இடம்பெற்றிருந்த தகவல்களை பார்ப்போம். இந்தியாவுக்கு வடகிழக்கில் உள்ள நாடுகளான தென்கொரியா, ஜப்பான், சீனா, மங்கோலியா, பர்மா ஆகிய நாடுகளில் இருந்து புதிய வகை வைரஸ் நோய் அதிகமாக பரவும்.

வெள்ளி
விளையாட்டு வீரர்களுக்கு விபத்து ஏற்படும். தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்களின் விலை ஏற்ற, இறக்கத்தை சந்திக்கும். உலகில் பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். பணம் கையிருப்பு என்பது குறைந்து எல்லாவற்றிலும் ஆன்லைன் பரிவர்த்தனை அதிகரிக்கும்.

உலகை ஆட்டி படைக்கும்
புதிய வைரஸ் நோய் தொற்று நோயாக பரவி வரும். இது உலகத்தையே ஆட்டிப் படைக்கும். ஸ்தம்பித்து நிற்கும் நிலை உருவாகும். இந்த புதிய வைரஸை மூலிகை மருத்துவங்களால் மட்டுமே அழிக்க முடியும். தேனீ, வண்டு, வவ்வால், வெட்டுக்கிளி போன்ற பூச்சிகளால் பயிர் விளைச்சலுக்கு சேதம் ஏற்படக் கூடும்.

எந்த கட்சி ஆட்சி
புகழ்பெற்ற பழைய கட்சியே ஆட்சியை பிடிக்கும். வரலாறு காணாக மழை பெய்யும். இந்த ஆண்டு சென்னையை புயல் பலமாக தாக்கும். இதனால் சென்னை தத்தளிக்கும். இந்த ஆண்டு கடுமையான மழையால் சென்னை, புதுச்சேரி, கடலூர், திருச்சி, மதுரை, ராமநாதபுரம், இலங்கை கச்சத் தீவு போன்ற இடங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.

சண்டை
பாகிஸ்தான் 3 நாடாக பிரியும். பாகிஸ்தான், சீனா உள்ளிட்டவை இந்தியாவுடன் சண்டையிட முயற்சிக்கும். ராக்கெட் ஏவுகணையை தயாரித்து இந்தியா வெற்றி அடையும் என அந்த பஞ்சாங்கத்தில் முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications