2 வாரத்தில் ஆயிரம் பேருக்கு மேல் பாதிப்பு... பன்றி காய்ச்சல் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை
டெல்லி: கடந்த 2 வாரத்தில் மட்டும் நாடு முழுவதும் 1,694 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறையின் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தான் மாநிலத்தில் தான் அதிகபட்சமாக 1,036 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பதாகவும், அதில், செவ்வாய் கிழமை வரை 54 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானுக்கு அடுத்ததாக குஜராத் மாநிலத்தில் 210 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தலைநகர் டெல்லியில் 168 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் 48 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 2 ஆண்டுகளாக குறைந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக கடந்தாண்டு 14,992 பேருக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்டதாகவும், அதில் 1,103 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.