மணிப்பூர்: 11 பேர் சுட்டுக்கொலை.. தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் அதிரடி!
டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரால் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஜிரிபாம் பகுதியில் நடந்த மோதலில் பாதுகாப்புப் படையினரால் ஆயுதக் குழுவைச் சேர்ந்த 11 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குக்கி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக மாறி, இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை காரணமாக சுமார் 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர்.

தொடர்ந்து, அவ்வப்போது இரு குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. அண்மையில், ஜிரிபாம் மாவட்டத்தில் 3 குழந்தைகளுக்கு தாயான 31 வயதான பழங்குடியின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வன்முறையாளர்களால் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் ஜிரிபாம் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினர் - ஆயுதக் குழுவினர் இடையே நடந்த மோதலில் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள ஒரு சி.ஆர்.பி.எஃப் படை முகாம் மீது ஆயுதக் குழுவினர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, பாதுகாப்பு படை வீரர்கள் அதிரடி தாக்குதலை நடத்தி உள்ளனர்.
இதில் ஆயுதக் குழுவைச் சேர்ந்த 1 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். எல்லையோர மாவட்டத்தில் குக்கி பிரிவைச் சேர்ந்த ஆயுதக் குழுவினர் நடத்திய இந்த தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் சிலர் காயமடைந்ததாக தெரிகிறது. பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications