பிரதமர் திறன் மேம்பாட்டு திட்டம்-தமிழகத்தில் 8 லட்சம் பேருக்கு பயிற்சி-எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு?
டெல்லி: பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு, புதுச்சேரியில் 8 லட்சம் இளைஞர்கள் பயனடைந்துள்ளனர் என்று லோக்சபாவில் மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் 2024 வரை பயிற்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 8,24,589 இளைஞர்களில் 1,72,336 பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
லோக்சபாவில் மத்திய அமைச்சர் ஜெயந்த் செளத்ரி கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு குறுகிய கால பயிற்சி வாயிலாக திறன் மேம்பாட்டு பயிற்சி, திறன் மேம்படுத்துதல் மற்றும் முன்கற்றல் அங்கீகாரம் வாயிலாக மறுதிறன் பயிற்சி அளிப்பதற்காக, மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டத்தை 2015-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2015-2016 முதல், 2021-2022 வரை பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்படி நாடு முழுவதும் மொத்தம் 13,724,226 இளைஞர்கள் திறன் பயிற்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 7,59,666 இளைஞர்களும், புதுச்சேரியில் 30,327 இளைஞர்களும் திறன் பயிற்சியைப் பெற்றுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் 2024 வரை பயிற்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 8,24,589 இளைஞர்களில் 1,72,336 பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்பட்டுள்ளது. இதேபோன்று புதுச்சேரியில் பயிற்சி பெற்ற 32,735 இளைஞர்களில் 10,504 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
குறுகிய கால பயிற்சி பெற்றவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 73,126 இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு, இவர்களில் 45,455 பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இது பயிற்சி பெற்றவர்களில் 62.16 சதவீதம் ஆகும். புதுச்சேரியில் பயிற்சி பெற்ற 8,125 பேரில் 7,629 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இது 93.90 சதவீதமாகும்.
பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மொத்தம் 1,53,667 பேர் பதிவு செய்துள்ளனர் என்றும், அதில் 1,19,710 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ், 6,380.87 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும், 4,906.49 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர் ஜெயந்த் செளத்ரி தெரிவித்தார்












Click it and Unblock the Notifications