கொரோனா: டெல்லியில் 177 குழந்தைகளுக்கு மல்ட்டி சிஸ்டம் அழற்சி நோய் பாதிப்பு-ஷாக் ரிப்போர்ட்
டெல்லி: கொரோனாவுக்குப் பிந்தைய பாதிப்பாக டெல்லியில் 177 குழந்தைகளுக்கு மல்ட்டி சிஸ்டம் அழற்சி நோய் (MIS-C) பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொரோனா 2-வது அலை இந்தியாவை மிக உக்கிரமாக தாக்கி வருகிறது. இந்த கொரோனா 2-வது அலையில் புதிய பாதிப்புகள், பக்க விளைவுகள் தொடர்பாகவும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.
கறுப்பு பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை பாதிப்புகள் போல மல்ட்டி சிஸ்டம் அழற்சி நோய் தாக்குதல் தொடர்பாகவும் கடந்த சில வாரங்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கொரோனா பாதிப்புக்குள்ளாகும் நபர்களின் வீடுகளில் உள்ள குழந்தைகளுக்குதான் இந்த Multi-System Inflammatory Syndrome in children (MIS-C) என்கிற மல்ட்டி சிஸ்டம் அழற்சி நோய் தாக்குதல் ஏற்பட்டு வருகிறது.

என்ன அறிகுறி?
Multi-System Inflammatory Syndrome in children (MIS-C) தாக்குதல் இருந்தால் உடல் உறுப்புகள், திசுக்களில் வீக்கம் ஏற்படும். காய்ச்சல், சுவாசிப்பதில் சிக்கல் உருவாகும். உடல் சோர்வு மற்றும் வயிற்று வலியும் ஏற்படும். தோல், நகங்கள் நீலநிறமாக மாறும் வாய்ப்பும் உள்ளது. கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என ரிப்போர்ட் வந்தாலும் கூட இந்த மாற்றங்களுக்கு சாத்தியங்கள் இருக்கின்றன.

டெல்லியில் 177 குழந்தைகளுக்கு பாதிப்பு
மகாராஷ்டிராவில் முதலில் இந்த MIS-C தாக்குதல் கண்டறியப்பட்டது. பின்னர் நாடு முழுவதும் பரவலாக குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்பு இருப்பது உறுதியானது. டெல்லியில் இதுவரை மொத்தம் 177 குழந்தைகளுக்கு இந்த மல்ட்டி சிஸ்டம் அழற்சி நோய் தாக்குதல் இருப்பது தெரியவந்துள்ளது. டெல்லியில் மட்டும் 109 குழந்தைகளுக்கும் குருகிராம், பரிதாபாத்தில் 68 குழந்தைகளுக்கும் இப்பாதிப்பு உறுதியாகி உள்ளது.

எந்த வயதினருக்கு பாதிப்பு?
பொதுவாக 6 மாதங்கள் முதல் 15 வயது வரையிலானவர்களுக்கு இப்பாதிப்பு ஏற்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள். அதேநேரத்தில் பெரும்பாலான பாதிப்புகள் 5 வயது முதல் 15 வயதுக்குட்பட்டவர்களுதான் ஏற்படுகிறது என்பதும் மருத்துவர்களின் தகவல். கொரோனா முதல் அலையின் போதும் கூட சுமார் 2,000 குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு இருந்தது என்கின்றன மருத்துவ துறை தரவுகள்.

முன்கூட்டியே சிகிச்சை
இத்தகைய பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையை தொடங்கிவிட்டால் எளிதாக குணப்படுத்திவிடலாம். ஆகையால் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் வீடுகளில் குழந்தைகளின் உடலில் ஏற்படுகிற மாற்றங்களையும் சேர்த்தே கவனித்தும் பரிசோதித்தும் வர வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள். ஆகையால் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டாலும் கூட கூடுமானவரை குறைந்தது 1 மாத காலமாவது பாதுகாப்பாக தனிமைப்படுத்திக் கொண்டு இருத்தல் நல்லது என்பதும் மருத்துவர்களின் அட்வைஸ்.












Click it and Unblock the Notifications