Flash Back:17-வது லோக்சபா: 2019-ல் மோடி பேசியது.. 2024-ல் கூட்டத் தொடர் நிறைவில் மோடி சொன்னது என்ன?
டெல்லி: நாட்டின் 17-வது லோக்சபா இறுதிக் கூட்டத் தொடர் இன்று நிறைவு பெற்றுள்ளது. 18-வது லோக்சபா தேர்தலை நாடு எதிர்கொண்டிருக்கிறது.
2019-ம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் 17-வது லோக்சபாவின் முதல் கூட்டம் ஜூன் மாதம் 17-ந் தேதி தொடங்கியது. அந்த முதலாவது கூட்டத் தொடர் தொடங்கும் போது பிரதமர் மோடி கருத்து தெரிவிக்கையில், அனைத்து புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நான் வரவேற்கின்றேன். நாட்டிற்கு பணியாற்றுவதற்காக வரும் அவர்களுடன், புதிய நம்பிக்கைகளும், புதிய கனவுகளும், புதிய கடப்பாடுகளும் வருகின்றன. 17-வது லோக்சபாவில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெறும் போதுதான் மக்களின் கனவுகளை நனவாக்க முடியும். சபை நடவடிக்கைகளில் எதிர்க்கட்சியினர் முனைப்புடன் பங்கேற்பார்கள் என்று நம்புகிறேன். லோக்சபாவில் எண்ணிக்கை குறித்து எதிர்க்கட்சியினர் வருந்த வேண்டாம். நாடாளுமன்றத்திற்கு வரும் போது, நாம் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்பதை மறந்துவிட வேண்டும். அனைத்துப் பிரச்சினைகளையும், திறந்த மனதுடன், நடுநிலையாக எதிர்கொண்டு நாட்டின் ஒட்டுமொத்த நலனுக்காக செயல்பட வேண்டும் என கூறியிருந்தார்.

இறுதி கூட்டத் தொடரில் மோடி பேசியது என்ன?: 17-வது லோக்சபாவின் இறுதி கூட்டத் தொடரில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பிரதமர் மோடி, நாட்டில் நடைபெறும் முன்னேற்றங்கள் ஒரு நபருக்கு சொந்தமானது அல்ல, மாறாக அனைத்து குடிமக்களுக்கும் சொந்தமானது. தற்போதைய அரசின் மூன்றாவது பதவிக்காலத்தில் இந்தியா உலகின் 3 வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்பது மோடியின் உத்தரவாதம். தற்போதைய அரசு கிராமப்புற ஏழைகளுக்காக 4 கோடி வீடுகளையும், நகர்ப்புற ஏழைகளுக்காக 80 லட்சம் உறுதியான வீடுகளையும் கட்டியுள்ளது. அரசின் மூன்றாவது பதவிக்காலம் அடுத்த 1000 ஆண்டுகளுக்கு நாட்டின் அடித்தளத்தை அமைக்கும். வரும் ஆண்டுகளில், 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை நாடு காணும். அயோத்தியில் உள்ள ராமர் கோயில் இந்தியாவின் சிறந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு தொடர்ந்து ஆற்றலை அளிக்கும். கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். ஏழைகளுக்கு சரியான வளங்களும், சுயமரியாதையும் வழங்கப்பட்டால் வறுமையை ஒழிக்க முடியும். கடந்த 10 ஆண்டுகளில், 40,000 கிலோமீட்டர் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகள் எட்டப்பட்டுள்ளன, 17 கோடி கூடுதல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன, துப்புரவு வசதி 40 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக அதிகரித்துள்ளது எனவும் பட்டியலிட்டார் பிரதமர் மோடி.












Click it and Unblock the Notifications