மேகாலயா நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர வெடி விபத்து.. 18 பேர் பலியான சோகம்! மேலும் பலர் அபாயத்தில்?
டெல்லி: மேகாலயா மாநிலத்தின் கிழக்கு ஜெயிண்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி மொத்தம் 18 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலரும் சிக்கியிருக்கலாம் என்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மேகாலயா மாநிலம், கிழக்கு ஜெயிண்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ளது தாங்ஸ்கு எனும் பகுதி. இங்கு சட்டவிரோதமாக ஒரு நிலக்கரிச் சுரங்கம் இயங்கி வந்துள்ளது. இந்நிலையில், இன்று (பிப்ரவரி 5ஆம் தேதி) அந்தச் சுரங்கத்தில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் இதுவரை 18 பேர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பலர் அந்தச் சுரங்கத்தில் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கிய ஒருவர் மட்டும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிலக்கரி சுரங்க விபத்து குறித்து அறிந்ததும், சம்பவ இடத்திற்கு மாநில பேரிடர் மீட்புப் படை, காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகம் இணைந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
காவல்துறை இயக்குநர் ஜெனரல் நோங்ராங், இந்த சம்பவம் தாங்ஸ்கு பகுதியில் இன்று காலையில் நடந்ததாகவும், சட்டவிரோதமாக இயங்கி வந்ததாக கூறப்படும் நிலக்கரிச் சுரங்க நடவடிக்கைகளின்போது நடந்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும், சம்பவ இடத்தில் இருந்து இதுவரை 18 உடல்களை மீட்டுள்ளோம். வெடிப்பு நடந்தபோது சுரங்கத்திற்குள் இருந்த தொழிலாளர்கள் மொத்தம் எத்தனை பேர் இருந்தனர் என்பது உறுதியாகத் தெரியவில்லை. மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
ஈஸ்ட் ஜெயந்தியா ஹில்ஸ் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் விகாஷ் குமார் கூறுகையில், சுரங்க வெடி விபத்தில் காயமடைந்த ஒருவர் முதலில் மீட்கப்பட்டு, சுட்னா ஆரம்ப சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல சிகிச்சைக்காக ஷில்லாங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மா, "கிழக்கு ஜெயின்டியா மலைகளில் நடந்த துயரமிக்க நிலக்கரிச் சுரங்க விபத்தால் நான் மிகுந்த துயரமடைந்துள்ளேன். இந்த துரதிர்ஷ்டவசமான இந்த சோகத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். மேகாலயா அரசு இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications