ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்:லோக்சபா, ராஜ்யசபாவில் எத்தனை மணி நேர விவாதம் தெரியுமா?
டெல்லி: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது லோக்சபாவில் 18 மணிநேரமும் ராஜ்யசபாவில் 21 மணிநேரமும் விவாதங்கள் நடைபெற்றன. இரு சபைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விவாதங்களுக்கு பதிலளித்து உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து இரு சபைகளும் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது: 18-வது லோக்சபாவின் உறுப்பினர்களாகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்பு/ உறுதி மொழி ஏற்புக்காக ஜூன் 24, 25 ஆகிய இரண்டு நாட்கள் ஒதுக்கப்பட்டன. இந்த அமர்வில், 542 உறுப்பினர்களில் 539 பேர் பதவியும் உறுதிமொழியும் ஏற்றனர்.

இந்தப் பதவியேற்புக்காக லோக்சபா தற்காலிக சபாநாயகராக பர்துஹரி மெஹ்தாவைக் ஜனாதிபதி நியமித்தார். லோக்சபா சபாநாயகர் ஜூன் 26-ந் தேதி நடைபெற்றது. குரல் வாக்கெடுப்பு மூலம் ஓம் பிர்லா, லோக்சபா சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நாளில், தமது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களைப் பிரதமர் நரேந்திர மோடி சபைக்கு அறிமுகம் செய்துவைத்தார்.
ஜூன் 27 அன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு இரு சபைகளின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றினார். அரசின் கடந்த கால சாதனைகளையும், தேச வளர்ச்சிக்கான எதிர்காலத் திட்டங்களையும் அவர் விரிவாக எடுத்துரைத்தார்.
ஜூன் 27 அன்று பிரதமர் மோடி, தமது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களை ராஜ்யசபாவுக்கு அறிமுகம் செய்தார்.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இரு சபைகளிலும் ஜூன் 28 அன்று தொடங்கியது. லோக்சபாவில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக இந்த விவாதத்தை ஜூலை 1 அன்றுதான் தொடங்க முடிந்தது. லோக்சபாவில் அனுராக் தாக்கூர், விவாதத்தை முன்மொழிந்தும், பன்சூரி சுவராஜ் வழிமொழிந்தும் பேசினார்கள். மொத்தம் 68 உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கேற்றனர். 50-க்கும் அதிகமான உறுப்பினர்கள் தங்களின் உரைகளை அவையில் தாக்கல் செய்தனர். 18 மணி நேரத்திற்கும் கூடுதலான விவாதத்திற்கு பின், ஜூலை 2 அன்று பிரதமர் மோடி பதிலளித்து உரையாற்றினார்.
ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை ஜூன் 28 அன்று சுதன்ஷு திரிவேதி முன்மொழிந்தும், கவிதா பட்டிதார் வழிமொழிந்தும் பேசினார்கள். விவாதத்தில் 76 உறுப்பினர்கள் பங்கேற்றனர். 21 மணி நேரத்திற்கும் அதிகமான விவாதத்திற்கு பின், பிரதமர் நரேந்திர ஜூலை 3-ல் பதிலளித்து உரையாற்றினார். இதனையடுத்து இரு சபைகளும் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டன. இவ்வாறு கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications