ஹெல்மெட் அணியும் பைக் ஓட்டிகளுக்கு மாறுகிறது ரூல்ஸ்.. ஏபிஎஸ் அவசியம்.. மத்திய அரசு புதிய அறிவிப்பு
டெல்லி: இனி புதிய இருசக்கர வாகனங்களுடன் 2 ஹெல்மெட்கள் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் புதிதாக வாங்கப்படும் அனைத்து இருசக்கர வாகனங்களுடன் இரண்டு BIS (Bureau of Indian Standards) சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட்டுகளை வழங்க வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
சாலை விபத்துக்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகின்றன.. விபத்து நடைபெறும் இடங்களை கண்டறிந்து விபத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. எனினும் சாலை விபத்துகள் பெருகுவதுடன், அநியாயமாக உயிர்களும் பறிபோய் கொண்டிருக்கின்றன.

சாலை விபத்துகள்
சமீபத்தில், தேசிய குற்ற ஆவண ஆணையம் விபத்துகளை பதிவு செய்து, அதற்கான காரணிகள் மற்றும் புள்ளி விவரங்களை வெளியிட்டிருந்தது. அதில், அதிகபட்சமாக மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 90,663 சாலை விபத்துக்கள் பதிவாகியிருக்கிறதாம்.
எனவே, இந்த நேரத்தில் வெளியே செல்பவர்கள் கவனமாக, எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றும், மத்திய அரசு கேட்டுக் கொண்டிருந்தது நினைவிருக்கலாம்.
18 வயது குறைந்த மைனர்கள்
தமிழகத்தில்கூட 18 வயதுக்கு குறைந்த மைனர்கள், டூ வீலர்களை ஓட்டுவதால் அதிக விபத்துகள் நடக்கின்றன.. அதிலும் பெரும்பாலான விபத்துகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பைக்கில் ஓட்டுநர் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்கிற சட்ட விதி உள்ளது. ஆனால் பலர் அதனை பின்பற்றுவதில்லை. எனவேதான் புதிய நடைமுறையை மத்திய அரசு கொண்டு வர முனைப்பு காட்டியிருக்கிறது.
ஆண்டி லாக் பிரேக்கிங்
அந்தவகையில், வரும் ஜனவரி 2026 முதல் புதிதாக வாங்கும் இருசக்கர வாகனங்களுக்கு 2 ஹெல்மெட்டுகள் வழங்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து பைக்குகளிலும் ஏபிஎஸ் எனப்படும் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்களை குறைக்கும் நோக்கில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும், பைக் விபத்துக்களில் உயிரிழப்புகளை குறைப்பதற்காகவுமே இந்தவொரு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
புதிதாக இரு சக்கர வாகனங்கள் வாங்கும்போது இரண்டு ஹெல்மெட்டுகள் வழங்கப்பட உள்ளன. மேலும், அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் ஏபிஎஸ் (ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்) கட்டாயமாகப் பொருத்தப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
2 ஹெல்மெட்டுகள்
அதுமட்டுமல்ல, தற்போது, சுமார் 40 சதவீத இரு சக்கர வாகனங்களில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) வசதி இல்லை. ஏபிஎஸ் தொழில்நுட்பம் இருந்தால், திடீரென பிரேக் பிடிக்கும்போது சக்கரங்கள் லாக் ஆவது தவிர்க்கப்படும். இதனால் விபத்துகள் குறையும் என்பதால் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இந்த நடவடிக்கையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
125 சிசிக்கு மேல் உள்ள இரு சக்கர வாகனங்களில் மட்டுமே ஏபிஎஸ் வசதி கட்டாயமாக உள்ளது. இதேபோல், தற்போது இரு சக்கர வாகனம் வாங்கும்போது, ஒரு ஹெல்மெட் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால், வரும் ஜனவரி 2026 முதல், இரண்டு ஹெல்மெட்டுகள் வழங்கப்பட உள்ளன என்றும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.












Click it and Unblock the Notifications