ஞாயிற்று கிழமையில் பட்ஜெட்.. தேதியை இறுதி செய்த மத்திய அரசு.. நிர்மலா சீதாராமன் புது ரெக்கார்டு
டெல்லி: மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இனு்று கூடிய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடருக்கான தேதி இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி 2026 - 27 ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முறை பிப்ரவரி 1ம் தேதியான ஞாயிற்றுக்கிழமையில் தாக்கல் செய்ய உள்ளார்.
நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை கடந்த 2017-18 நிதியாண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இதனால் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாள் ஜனாதிபதி உரையுடன் தொடங்கும்.
இந்நிலையில் தான் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டம் அதன் தலைவராக இருக்கும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தொடரில் பட்ஜெட் கூட்டத்தொடருக்கான தேதி இறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28 ம் தேதி தொடங்க உள்ளது. அன்றைய தினம் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்றுவார். அதன்பிறகு ஜனவரி 29ம் தேதி நாடாளுமன்றத்தின் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்படும். பிறகு பிப்ரவரி 1ம் தேதியான ஞாயிற்றுக்கிழமையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
பொதுவாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாடாளுமன்றம் செயல்படுவது இல்லை. இருப்பினும் பட்ஜெட்டுக்காக சில முறை நாடாளுமன்றம் சனிக்கிழமைகளில் கூடியுள்ளது. கடந்த 2015-16, 2016-17 மற்றும் 2025-26 ஆகிய மூன்று நிதியாண்டுகளில் மத்திய பட்ஜெட் சனிக்கிழகைளில் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் ஞாயிற்றுக்கிழகைளில் பட்ஜெட் தாக்கல் செய்ப்பட்டது இல்லை. இந்த முறை அந்த நடைமுறை மாற உள்ளது. மேலும் பட்ஜெட் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படும்போது அன்றைய தினம் பங்குச்சந்தைகளில் சிறப்பு வர்த்தக அமர்வு இருக்க வாய்ப்புள்ளது.
மேலும் இந்த பட்ஜெட்டின் மூலமாக நிர்மலா சீதாராமன் புதிய சாதனை படைக்க உள்ளார். அவர் தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் 9வது பட்ஜெட் இதுவாக அமையும். இதன்மூலம் நாட்டில் அதிகமாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த தலைவர்களின் பட்டியலில் நிர்மலா சீதாராமன் 2வது இடத்தை ப சிதம்பரம் உடன் பகிர்ந்து கொள்ள உள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் மொத்தம் 9 பட்ஜெட் தாக்கல் செய்துள்ள நிலையில் அதனை நிர்மலா சீதாராமன் அவரது சாதனையை சமன் செய்ய உள்ளார். அதன்பிறகு அடுத்த ஆண்டும் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்சத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் மொராஜி தேசாய் சாதனையை சமன் செய்வார்.
மொராஜி தேசாய் கடந்த 1959 முதல் 1964 வரை 6 பட்ஜெட்டுகளையும், 1967 முதல் 1969 வரை நான்கு பட்ஜெட்கள் என மொத்தம் 10 மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். நம் நாட்டில் அதிகமாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் என்ற சாதனை தற்போது மொராஜி தேசாய் வசம் தான் உள்ளது. அடுத்த ஆண்டு நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யும்பட்சத்தில் அவர் மொராஜி தேசாய் சாதனையை சமன் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications