மத்திய பாஜக அரசுக்கு எதிராக அணி திரளும் 22 எதிர்க் கட்சிகள்:விரைவில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை
டெல்லி: மத்திய பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக 22 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. இந்த 22 கட்சிகளின் தலைவர்களும் விரைவில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
கொரோனா விவகாரத்தை மத்திய அரசு சரியாக கையாளவில்லை என்பதை முன்வைத்து கடந்த மே மாதம் 22 எதிர்க்கட்சித் தலைவர்கள் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினர். தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் செப்டம்பர் 14-ந் தேதி தொடங்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து மீண்டும் ஒன்று கூடி ஆலோசனை நடத்த எதிர்க்கட்சித் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த கூட்டத்தை விரைவாக நடத்த வேண்டும் என்று பிற எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி இருந்தனர். ஆனால் ராஜஸ்தான் விவகாரம், செயற்குழு கூட்டம் ஆகியவற்றை முன்வைத்து காங்கிரஸ் கட்சி கால அவகாசம் கேட்டிருந்ததாம்.
இதனால் அடுத்து வரும் வாரங்களில் எதிர்க்கட்சித் தலைவர்களின் மெகா ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அரசின் கொரோனா கால நடவடிக்கைகள், பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்புகள், வரலாறு காணாத பொருளாதார சரிவு, வேலைவாய்ப்பு இழப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
அதேபோல் அனைத்து எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக எப்படி ஒருங்கிணைந்து செயல்படுவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. நீட் தேர்வுகள், ஜிஎஸ்டி விவகாரத்தில் பாஜக அல்லாத மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தை அண்மையில் சோனியா காந்தி கூட்டியிருந்தார்.
இந்த நிலையில் அடுத்ததாக 22 எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications