கானல் நீரா காவிரி நீர்? தமிழ்நாட்டுக்கு கிடைத்துவிடுமா? கூடியது மேலாண்மை ஆணைய கூட்டம்!
டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பாசன பகுதிகளில் நீரில்லாமல் பயிர்கள் வாடிவரும் நிலையில் இன்றைய காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகா திறந்துவிட உத்தரவிடும் என்பது எதிர்பார்ப்பு.
டெல்லில் காவிரி ஆணைய கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்துக்கு தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமை வகிக்கிறார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

அண்மையில் பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு 40.4 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர வேண்டிய நிலையில் 11.6 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது. கர்நாடகாவில் 4 முக்கிய நீர்த்தேக்கங்களின் முழு கொள்ளளவான 114.6 டி.எம்.சி.-யில், 91 டி.எம்.சி அளவிற்கு மொத்த நீர் இருப்பு தற்போது உள்ளது. ஆனால் கர்நாடக அரசு 28.8 டி.எம்.சி அளவுக்கு பற்றாக்குறையாக தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளது என சுட்டிக்காட்டி இருந்தார்.
இதனடிப்படையில் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா திறந்துவிட வேண்டிய உரிய காவிரி நீரை வழங்க தமிழ்நாடு பிரதிநிதிகள் இன்றைய கூட்டத்தில் வலியுறுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications