காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? சோனியாவிற்கு பறந்த கடிதம்.. 23 மூத்த தலைவர்கள் கோரிக்கை
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு காங்கிரஸ் கட்சியின் 23 மூத்த தலைவர்கள் கடிதம் எழுதி உள்ளனர். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று இவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
Recommended Video
காங்கிரஸ் கட்சிக்குள் தற்போது மூத்த தலைவர்கள் இடையே கடுமையான மோதலும், கருத்து வேறுபாடும் நிலவி வருகிறது. அதிலும் மாநிலங்களில் உயர் பதவிகளை வகிக்கும் தலைவர்கள் இடையே கடுமையான கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
தற்போது தேசிய அளவில் இது எதிரொலிக்க தொடங்கி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் அடுத்த தேசிய தலைவர் யார் என்பது தொடர்பான தீவிரமான விவாதங்கள் எழுந்துள்ளது

காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் கட்சி சார்பாக கடந்த முறை நடந்த காரிய கமிட்டி கூட்டத்திலேயே இது தொடர்பான விவாதங்கள் எழுந்தது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர், புதிய தலைவரை உடனே தேர்வு செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அடுத்த வருடம் பல்வேறு மாநில தேர்தல்கள் வருகிறது. இந்த தேர்தல்களை எதிர்கொள்ள புதிய தலைவர்களை நியமிக்க வேண்டும், என்று மூத்த தலைவர்கள் சிலர் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

தலைவர் எப்படி
முறையாக பொறுப்பேற்ற திறமையான தலைவர் வேண்டும். இடைக்கால தலைவர் கிடையாது. களத்தில் இறங்கி பணிகளை செய்யும் நபர் ஒருவர்தான் எங்களுக்கு தலைவராக வேண்டும், என்று இவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராகும் திட்டத்தில் இல்லை. சோனியா காந்தியும் முழு நேர தலைவராக வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள்.

மன்மோகன்சிங்
இதனால் காங்கிரஸ் கட்சிக்கு மன்மோகன் சிங் அல்லது ஏகே ஆண்டனியை தலைவராக தேர்வு செய்ய சில மூத்த உறுப்பினர்கள் முயல்வதாக கூறப்படுகிறது. இன்னும் சில தலைவர்கள் ப. சிதம்பரம், சசி தரூர் ஆகியோர் தலைவராக வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். பிரியங்கா காந்தி, சச்சின் பைலட் தலைவராக வேண்டும் என்றும் சிலர் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

மீட்டிங்
இன்னொரு பக்கம் மாநில காங்கிரஸ் கட்சிக்குள் நிறைய குழப்பங்களும், மோதல்களும் நிலவி வருகிறது. இதிலும் நிறைய மாற்றங்களை செய்ய வேண்டும். மாநில காங்கிரஸ் கட்சிக்கு உள்ளே தேர்தலை நடத்த வேண்டும். நாடு முழுக்க மாநில காங்கிரஸ் கட்சியில் தேர்தலை நடத்த வேண்டும். மாநில காங்கிரஸ் கட்சிக்குள் மாற்றங்களை, சீர் திருத்தங்களை செய்ய வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

என்ன கடிதம்
இதற்காக காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தை நடத்த வேண்டும் என்று சோனியா காந்திக்கு காங்கிரஸ் கட்சியின் 23 மூத்த தலைவர்கள் கடிதம் எழுதி உள்ளனர். ஆனால் இந்த தகவலை சில காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மறுத்து வருகிறார்கள். அப்படிப்பட்ட மீட்டிங் எதற்கும் திட்டமிடவில்லை, கடிதங்கள் எதுவும் பரிமாறப்படவில்லை என்று ரன்தீப் சிங் சுரஜ்வாலா உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மறுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications