பிரதமர் மோடியை சந்திக்க.. காஷ்மீரிலிருந்து 815 கிமீ தூரம் நடந்தே செல்லும் இளைஞர்.. சுவாரசிய பின்னணி
டெல்லி: பிரதமர் மோடியால் கவரப்பட்டு அவரை சந்திப்பதற்காக ஜம்மு காஷ்மீரில் இருந்து பஹிம் நசிர் ஷா என்ற இளைஞர் டெல்லி நோக்கி நடந்தே பயணம் மேற்கொண்டுள்ளது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீ நகர் அருகே இருக்கும் சலிமார் பகுதியை சேர்ந்த பஹிம் நசிர் ஷாவிற்கு 28 வயது ஆகிறது. எலக்டிரிஷியனாக பணியாற்றி வரும் இவர் பிரதமர் மோடியின் பேச்சுக்களாலும், அவரின் அரசியல் திட்டங்களாலும் கவரப்பட்டு தற்போது டெல்லி நோக்கி நடைபயணம் மேற்கொண்டு உள்ளார்.
மொத்தம் 815 கிலோ மீட்டர் தூரத்தை இவர் நடந்தே கடக்க உள்ளார். தற்போது வரை ஸ்ரீ நகரில் இருந்து பயணித்து 200 கிலோ மீட்டர் தூரம் வந்துள்ளவர் ஜம்மு காஷ்மீரில் உள்ள உதாம்பூர் என்ற பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

பயணம்
தனது பயணம் குறித்து பேசிய பஹிம் நசிர் ஷா, நான் மோடியின் தீவிர ரசிகன். அவரின் அரசியல் கொள்கைகள், பேச்சுக்கள் எனக்கு பிடிக்கும். நான் காஷ்மீரில் இருக்கிறேன். பிரதமர் மோடியை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் நான் இந்த பயணத்தை மேற்கொண்டு இருக்கிறேன்.

சந்திப்பேன் '
என்னுடைய பயணத்தின் இறுதியில் நான் எப்படியும் பிரதமர் மோடியை சந்திப்பேன் என்று நம்புகிறேன். எப்படியும் என்னுடைய கனவு நிறைவேறும் என்று நம்புகிறேன். என்னுடைய இந்த நடைபயணம் பிரதமரின் கவனத்தை பெறும் என்று நம்புகிறேன். இதற்கு முன்பே நான் பிரதமர் மோடியை சந்திக்க முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறேன்.

முயற்சி
ஆனால் அவரின் அரசியல் பிரச்சாரங்களின் போது அவரை சந்திக்க பாதுகாவலர்கள் அனுமதிக்கவில்லை. அவர் தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்த போது மசூதியில் தொழுகையை கேட்டுவிட்டு, பிரச்சாரம் மேற்கொள்ளாமல் தொழுகை நடக்கும் வரை அமைதியாக இருந்தார். அவரின் அந்த செயல் என்னுடைய மனதை கவர்ந்தது. அவருடைய ரசிகனாக அன்றுதான் நான் மாறினேன்.

பேச்சுக்கள்
அவருடைய பேச்சுக்களால் நான் கவரப்பட்டேன். கடந்த இரண்டரை வருடமாக பிரதமர் மோடியை சந்திக்க தீவிரமாக முயன்று வருகிறேன். அவர் காஷ்மீர் வந்த போது அவரை என்னால் சந்திக்க முடியவில்லை. இந்த முறை கண்டிப்பாக பிரதமரை சந்திப்பேன் என்று நம்புகிறேன். ஜம்மு காஷ்மீர் வேகமாக மாறி வருகிறது.

சிறப்பு உரிமை
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு உரிமை ரத்து செய்யப்பட்டதில் இருந்து வேகமாக முன்னேற்றம் கண்டு வருகிறது. எங்கள் யூனியன் பிரதேசத்தில் பல்வேறு பகுதிகள் வேகமாக முன்னேறி வருகிறது. பிரதமர் மோடியுடன் வேலைவாய்ப்பு குறித்து நான் பேசுவேன். ஜம்மு காஷ்மீரில் தொழிற்சாலைகள் கொண்டு வருவது குறித்தும் பேசுவேன், என்று பஹிம் நசிர் ஷா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications